Wednesday, June 16, 2010

ஈழச்சுடுகாடும் செம்மொழி மாநாடும்

அண்ணே வணக்கம்ணே,
இந்த கனமான பதிவோட தங்கையின் காதலன்ங்கற தனிப்பதிவையும் , ஆயுதம்ங்கற சிறுகதையையும் போட்டிருக்கேன். படிச்சு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

மொழி தழைக்க அதை பேசுபவன் உயிரோடு இருந்தாக வேண்டும். இது குறைந்த பட்ச தர்க்கம். எசன்ஷியல். அவனுக்கு தனியே ஒரு நாடிருக்க வேண்டுமென்பது கட்டாயம் கிடையாது.  நாடு இருந்தால் நல்லதே. ஆனால் அது ஜஸ்ட் லக்சரிதான். உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைக்கலாம். தப்பே இல்லை. எதுக்காகவும் உசுர விடறவன் முட்டாள்.

இந்த ஜகந்நாடகத்தில் காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கும். அதை கண்டு களிக்க நாம உயிரோட இருக்கிறது முக்கியம். உங்க எதிரியை விட நீங்க ஒரு நாள் அதிகம் வாழ்ந்தா கூட நீங்க ஜெயிச்ச மாதிரிதான்னு எங்கனயோ படிச்சேன். ஏன்னா எதிர்கால உலகத்துக்கு பிழைச்சிருக்கிறவன் சொல்றதுதான் உண்மை.  ( கலைஞர் எம்.ஜி.ஆர் மேட்டரையே பாருங்க) 

எங்கள் ஊரில் கூட ஜெவா, மு.க வா என்று நாள் முழுக்க தொண்டை தண்ணி வறள பேசும் பார்ட்டிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்றது ஒன்னுதான். நீ எங்கன இருக்கியோ அங்கன இருக்கிற சூழலை புரிஞ்சுக்க. அதோட உன்னை பொருத்திக்க.

பிரபாகரன் மட்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கிட்டு வரதராஜ பெருமாள் மாதிரி பொசிஷன்ல அட்ஜஸ்ட் ஆகி இருந்தா கூட ஈழ நாடு சுடுகாடா ஆகியிருக்காது. காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசு.

ஒவ்வொரு நன்மைலயும் ஒரு தீமை மறைஞ்சிருக்கு. ஒவ்வொரு தீமைலயும் ஒரு நன்மை மறைஞ்சிருக்கு. இலங்கைல கலவரம் மூண்டதால ஈழத்தமிழர்கள் உலகெங்கும்  பரவினாங்க அவிகளோட தமிழும் பரவுச்சு.

இலங்கை அரசால ஈழம் சுடுகாடாயிட்டதால  அங்கே நடக்கிற விழாவுக்கு இங்கருந்து யாரும் போகக்கூடாதுன்னு அடம் பிடிச்சாய்ங்க. அதுல வெற்றியும் அடைஞ்சாங்க. என்னோட  கருத்து என்னடான்னா நம்மாளுங்க ( அமிதாப்,ரஜினி எட்ஸெட்ரா) அங்கே போறதால அரசுக்கு ஏதோ அனுகூலமிருக்கு. அதனால தான் ராஜபக்சே அத்தனை மெனக்கெட்டார்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி "மிஸ்டர் ராஜபக்சே நீங்க  முதல் கட்டமா இத்தனை ஆயிரம் தமிழருக்கு மறுவாழ்வு கொடுங்க,  தமிழர் பகுதில சிங்களவர்களை குடியேத்தறத நிப்பாட்டு அப்பத்தான் எங்காளுங்க அங்கே வருவாய்ங்கன்னு பேரம் பேசியிருக்கலாம். அதை விட்டுட்டு முரட்டுப்பிடிவாதம் பிடிச்சு கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டாய்ங்க.

இப்போ இந்த செம்மொழி மாநாடு நடத்தறதுக்கும் ஈழம் சுடுகாடா மாறினதுக்கும் முடிச்சு போட்டு ஏசறாய்ங்க.  அரசாங்கம் மதயானை மாதிரி அதை கட்டிப்போட முடியாது. வேணம்னா திசை திருப்பலாம். இப்படியில்லப்பா அப்படிங்கலாம். (அதுவே கஷ்டம்)

ஜூன் 23க்கு இன்னம் 6 நாள் இருக்கு. செம்மொழி மாநாட்டை எதிர்க்கிற பார்ட்டிங்கல்லாம் ஈழத்துல தவிக்கிற சனத்துக்கு உண்மையிலயே உடனடியா உதவற மாதிரி, தமிழக அரசோட லிமிட்ஸ்ல இருக்கிற சமாசாரங்களை டிமாண்ட் பண்ணலாம். இதை செய்தா மாநாட்டை எதிர்க்கமாட்டோம்னு நிபந்தனை விதிக்கலாம்.

தாத்தாவுக்கு ரெம்ப வயசாயிட்டதால ( அறுவது வயசாயிட்டாலே ஒரு ரவுண்ட் கம்ப்ளீட் ஆகி அடுத்த ரவுண்டு ஆரம்பமாயிருது. தாத்தா ,பாட்டியெல்லாம் குழந்தை தனமா  நடந்துக்க இதான் காரணம்)  முக்கியமில்லாததெல்லாம் முக்கியமா படுது. எதெல்லாம்  முக்கியமோ அதெல்லாம் முக்கியமில்லாததா படுது. எதுக்கெல்லாம் அவசரப்படனுமோ அதுக்கெல்லாம அவசரப்படாம ( ஈழப்படுகொலைகள்), எதுக்கெல்லாம் அவசரப்பட கூடாதோ அதுக்கெல்லாம் ( சட்டமன்ற திறப்பு விழா) அவசரப்பட்டுக்கிட்டிருக்கு. தாத்தாவுக்கு மாநாடு நல்ல படியா நடக்கிறது முக்கியம். நமக்கு ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு முக்கியம். அவருக்கு முக்கியமா படறத வச்சி நமக்கு முக்கியமானதை சாதிச்சுக்கலாம்ல.


ஈழச்சுடுகாடும் செம்மொழி மாநாடும்ங்கற தலைப்புல பாதி தான் ஜஸ்டிஃபை ஆச்சு. மத்ததை இப்ப பார்ப்போம்.  என்னதான் கலைஞர் கட்சி மாநாடு மாதிரி ஆயிரக்கூடாதுன்னு ப்ரிகாஷன்ஸ் எடுத்துக்கிட்டாலும் செம்மொழி  மாநாடு  தி.மு.க மாநாடு மாதிரி தான் நடக்கப்போவுது. இதனால தமிழுக்கு என்ன  நன்மைங்கறதை  அது நடந்து  முடிஞ்ச பிறகுதான் கன்க்ளூட் பண்ண முடியும். நிற்க என் கருத்து என்னன்னா மாநாடு நடத்தறதை விட  கீழே நான் கொடுத்திருக்கிற விஷயங்களை முதல்ல செய்யனும்.


நம்ம நாட்லதஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபான்னு ஒரு அமைப்பு இருக்கு. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் 30 வயது மிகாத இளைஞர்களே  இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும் .
சில எச்சரிக்கைகள்:

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.
அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை
கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி "எழுச்சி" க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் இதையெல்லாம் செய்யாவிட்டால் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.

அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்தியத் திருநாட்டின்  மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் பிச்சைக்காரர்கள், கொத்தடிமைகள் குறைவர்.


1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தாய் மொழியை மறக்காது தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும்.வல்லவன் வகுத்தது வாய்க்கால். பணம் பத்தும் செய்யும்னு சொல்றச்ச தமிழை வளர்க்காதா?  மேலும் ஆத்திர அவசரத்துக்கு  த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும். அதற்கு முன் கணிணி தொடர்புள்ளவர்கள் அனைவரும் யூனிகோடை உபயோகிக்க துவங்க வேண்டும். யூனிகோட் அனைத்து அப்ளிகேஷன்ஸிலும் வேலை செய்ய தேவையான மாற்றங்களை செய்தாக வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்சனே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது.  நாங்களாச்சும் தெலுங்கு ஸ்டேடுல வாழறோம். உங்களுக்கெங்கே வலிக்குது.


3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும். அதில் மராமத்துக்கள் செய்யகூடாது புஷ் என்பதை புஸ் என்றும் எம்.ஜி.ஆர் என்பதை எம்சியார் என்றும் எழுதக்கூடாது. முக்கியமாக அறிவியல் முன்னேற்றம் காரணமாய் கண்டுபிடிக்கப்படும் பொருட்களின் பெயர்களில் கை வைக்கவே கூடாது. செல்ஃபோனை கை பேசிங்கறாய்ங்க. ஏன்யா நீ பெத்த பிள்ளைக்கு உன் விருப்பப்படி பேர் வச்சுக்கலாம். எவனோ பெத்த பிள்ளைக்கு நீ எப்படி பேர் வைக்கப்போகும். பேர் வைக்கிறதுல அத்தனை  வெறி இருந்தா நீங்களே கண்டுபிடிங்கய்யா.. அதைவிட்டுட்டு பரோட்டாவுக்கு அடி ரொட்டி (பலான அர்த்தமெல்லாம் வருது) காஃபிக்கு குழம்பி ( கேட்கிறவன் குழம்பி போயிருவான்) ங்கற பிசினசெல்லாம் கூடாது.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள். ஆமாங்கண்ணா!  மூன்று என்ற வார்த்தைய கொச்சைல எழுதறச்ச "னு" போடனுமா "ணு" போடனுமா சொல்லுங்கண்ணா

5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்தையும் வலையேற்ற வேண்டும். பத்து வருடங்களுக்கு அ இருபது வருடங்களுக்கு முந்தைய படைப்புகளை படிக்க இளைய தலைமுறை சிரமப்படலாம். எனவே எளிய தமிழிலும் பெயர்த்தாக வேண்டும்.  அப்படி வலையேற்றம் செய்தவற்றை தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மேற்படி வலையேற்றத்தின் போது உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டிக்க  வ‌கை செய்ய‌ வேண்டும்.

8.இன்றைய தலைமுறையின் தமிழே வேறாக இருக்கிறது. அவர்கள் செந்தமிழில் தான் எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாது  சின்ன சின்ன  கட்டுரைகளை   பேச்சுத்தமிழிலேனும்  எழுத ஊக்குவிக்க வேண்டும். எத்தனையோ தமிழ் செலாவணில இருக்கு. பத்தோட பதினொன்னா இவிக தமிழும்  இருந்துட்டு போகும்ல. புது புது வார்த்தைகள் கிடைக்குமில்ல.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். ( சின்ன வயசுல பிரபாகரனோட உச்சா போனவரு அது இதுன்னு தடை போட்டுராம ஈழத்து அறிஞர்களுக்கும் உரிய இடம் தரவேண்டும்) உலக அளவில்   மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் கற்பித்தல் ,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,( நான் ரெம்ப சின்ன மனிதனுங்கோ ) ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு, தமிழை தப்பு தப்பாக  உச்சரிக்கும் டிவி கேம்பயர்களுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.முன்ன‌ர் கூறிய‌ உலக அளவிலான  அர‌சு சாரா நிர்வாக‌ம்  ஒரு வார இதழை துவக்க வேண்டும். குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு, அரசியல் கட்சிகள் தமது   விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு  மேற்படி  ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தை வைத்து எடிட் செய்ய சொல்லலாம். (குமுதம் பாணியில்)ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலத்தை  கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது. உலகெங்கும் வாலண்டியர்ஸை நியமிக்கலாம். ஒரே ஒரு சிறுவனுக்கு ட்யூட்டர்  தேவைன்னாலும் 24 மணி நேரத்துல ஏற்பாடு செய்ய வேண்டும்.