Sunday, June 6, 2010

என்னை மன்னித்து விடு

என்னை மன்னித்து விடுங்கள்!
இந்த கடைசி இரவிலும்
முதலும் முடிவுமான சத்தியத்தை
சொல்லி  உங்கள் நிம்மதியை கெல்லியெறிகிறேன்
பேரழிவு அஞ்சல் செய்யப்பட்டுவிட்டது.
அது உங்கள் கெஞ்சல்களை பரிசீலிக்காது

என்னை மன்னித்து விடுங்கள்!
ஸ்வப்ன ஸ்கலிதங்களை விட சுய இன்பம்
நேர்மையானது.
சுய இன்பத்தை விட செக்ஸ் நேரிடையானது.
அபார்ஷனை விட கருத்தடை அறிவுப்பூர்வமானது
பெற்ற மகளை விற்ற கதைகளை பார்த்தால்
பாலறியும் சோதனை மேல்.
என் கருத்துகள்  உங்களில்
உறுத்தல்களை உண்டாக்கினாலும் சரியென்று
நிஜங்களை நிர்பயமாக சொல்லி வந்தவன்.

இந்த கடைசி கணத்தில்
இதோ அழிவு வாசலில் காத்திருக்கும் கணத்தில்
நிஜத்தை சொல்லாவிட்டால்
இத்தனை நாள் நான் சொல்லி வந்த நிஜமெல்லாம்
முதலிரவுக்கு முன்னான ஜம்பங்கள் ஆகிவிடும்.

நாளை பேரழிவு விதிக்கப்பட்டிருக்கிறது !
இதற்கான விதை ஏற்கெனவே உங்களால்
விதைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் விதைத்ததுதான் முளைத்திருக்கிறது.
அறுக்கத்தான்  நீங்கள் இருக்கமாட்டீர்கள்.

என்னை மன்னித்து விடுங்கள்!
அடை மழையாய் பொழிந்தேன்
கல்லாகிப் போன உங்கள் நெஞ்சங்களில்
சற்று மனிதத்தை முளைக்க செய்ய முடியவில்லை..

என்னை நானே பணயம் வைத்து
பெரிய சூதாட்டமே ஆடிப் பார்த்து விட்டேன்
விதிக்கரங்களின் பிடியிலிருந்து
உங்களை விடுவிக்க முடியவில்லை

படைப்பின் ஆரம்பத்திலேயே அப சகுனம்.
எவனும் எவளையும் குற்ற உணர்வுடன்
கூடியதாகத்தானே வரலாறு
உங்களிலான, உங்கள் இடையியலான  இருட்டை விலக்க
உதய சூரியனாய் உதித்தேன்..
என்னை ராகுவைப் போல் விழுங்கத்தான் பார்த்தீர்கள்

உங்களை  காப்பாற்ற வந்த எனக்கு உங்களிடமிருந்து
என்னை காப்பாற்றிக்கொள்வதே பெரிய வேலையாயிற்று

ஆரம்பத்தில் என்னில் ஒரு மிருகத்தை கண்டு  பதைத்தேன்
அப்படியேதுமென்னில் இல்லை என்று உங்களை போலவே நம்ப துடித்தேன்

நடப்புகளுக்கு  நம்பிக்கைகள்  போடும் தடைகள் கணக்கில்லை
என்னுள்ளான மிருகமோ என் மனமெங்கும் உலவி விட்டையிட்டு நாறடித்தது..
வேளையறியாது  ஊளையிட்டது..

என் பைத்தியத்துக்கு ஒரு வைத்தியம் கண்டு பிடித்தேன்..
அதை சற்று  நேரம் உலவ விடுவதே..
குளியலறை, கழிவறை, கட்டிலறை ,தனிமைகளில்
உலவ விட்டேன்..

அது என்னில் இருப்பதை அங்கீகரித்த
கணத்திலிருந்தே அதனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டது.
உடன்படிக்கையை அந்த மிருகம் என்னவோ ஏற்றுக்கொண்டுவிட்டது.
மனிதனான நான் தான் ப்ரீச் ஆஃப் அக்ரிமென்டுக்கு இறங்கி
அதனிடம் மூக்குடைபட்டேன்.

என்னில் போல் உங்களில் இருந்த  மிருகத்தை உங்களுக்கு
அடையாளம் காட்டினேன்.
நீங்களோ  நிர்வாண நிஜத்தை பார்க்க மறுத்து
என்னை வெறுத்தீர்கள்.

புள்ளினமாய் வானில் பறந்திருந்தால் அதில் சுவடுகள் இருந்திராது
பூமியிலாவது  புல்லினமாய் படர்ந்து
காற்றில்  அசைந்தாடி இருந்தால்
எந்த புயலும் உங்களை கெல்லியெறிந்திராது..

நீங்களோ காற்றுக்கும் வேலியிட்டு  கட்டுப்படுத்த பார்த்தீர்கள்
கங்கைக்கு தொழிற்சாலை கழிவுகளால் மூடியிட்டீர்கள்..

இயற்கையின் ஒரே ஆணையை அலட்சியம் செய்யப்பார்த்தீர்கள்
அத்துமீறினீர்கள்.. காமம் தலைக்கேறியது..உங்கள் மனமெங்கும் அதுவே  நிறைந்தது.

இயற்கைக்கு ஒரு இயற்கை உண்டு.. அது காலிக்கோப்பைகளை நிரப்பும்
நிறைந்த கோப்பைகளை காலி செய்யும்..

அது தன் கடமையை செய்தது. நிரம்பியதை காலி செய்தது.
காலியானதை நிரப்பியது.
அதன் கட்டளை ஒன்றே இனப்பெருக்கம்.
இயற்கை வழி வாழ்ந்திருப்பின் அதற்கான நோக்கமும், அதன் தாக்கமும்
சிலவருடங்கள் அமலில் இருந்து வாபஸ் வாங்கப்பட்டிருக்கும்..

இயற்கையின் சட்டத்தை இந்த உதவாக்கரை அரசாங்கங்களின்
கட்டளையாய் கருதி கிடப்பில் போட்டீர்கள்..
அணை உடைப்பெடுத்து ஓடியது..

காலம் கடந்த பின் காமக்கூடத்தில் கூத்துக்கு முயல
துள்ளல் துடைத்துக்கொண்டு போய் கட்டில் களத்தில் 
நாலு காலும் தூக்கினீர்கள். இயற்கை உங்கள் இன உறுப்புக்களை
முகர்ந்து விட்டு நகர்ந்தது.

இயற்கையின் விதி லா (LAW)
உங்கள் சமூகத்தின் சட்டங்கள் பைலா(BILAW)

பைலா லாவுக்கு உட்பட்டிருக்கவேண்டும். இன்றேல் ரத்து உத்தரவு நிச்சயம்.
மிருகங்களுக்கு வராத கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் எல்லாம்
உங்களை தாக்க இதுதான் காரணம்..

கு.ப. உங்கள் சரீரதர்மங்களுக்கு தலைவணங்கி வாழ்ந்திருந்தாலும்
இந்தளவுக்கு  தரம் தாழ்ந்திருக்கமாட்டீர்கள்..

காமதேவன் காலா காலத்தில்  கைகுலுக்க வந்தபோது உங்கள் கைகள் கொலைக்கும்,தற்கொலைக்கும் வழி செய்யும் காசையும், காசுக்கு வழி செய்யும் கல்வியையும்  பொறுக்கிகொண்டிருந்தன.

நீங்கள் கைகுலுக்க முனைந்த போது காம தேவன்   தன் கைகளை கால்சட்டைப்பைக்குள் ஒளித்துக்கொண்டான்.

உங்களில் சக்தியின் ஊற்று பொங்கி எழுந்த போது  சாவின் நிழல்களுடனான யுத்தங்களுக்கு ஆயுத சேகரிப்பு செய்தீர்கள்.. காமத்தின் நிழலான பணத்தையும் அதன் நிழல்களையும்  நிலுவை செய்வதில்  நிமக்னமானீர்கள்.

அன்று உங்களில் இயற்கை குறித்த புரிதல் இல்லை.

இன்று சக்தியின் ஊற்றுக்கண் அடைத்துக்கொண்டது.
சந்தேக பேய் சதிராடுகிறது.  சகியே பேயாய் காட்சியளித்தாள். வரதட்சிணை சாக்கு சொல்லி தாய் வீட்டுக்கு துரத்தினீர்கள்.

அவசரமாய் தாயாக்கி  தீர்வு கண்டீர்கள்.

காமத்துக்கு வயாக்ராக்களையும்,பசிக்கு ஜின்ட்டாக்குகளையும் தான் நம்பினீர்கள்

உங்கள் தெருக்களின் குப்பைத் தொட்டிகளை விட
உங்கள் வீட்டு பெண்களின் கருப்பைகளை மோசமாக நிர்வகித்தீர்கள்
நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?

என்னிடம் அமுதமில்லை.
இருந்திருந்தால் செத்துப்போன உங்களை உயிர்ப்பித்திருப்பேன்

என்னிடம் சஞ்சீவினி வேரில்லை.
இருந்திருந்தால் உங்கள் மயக்கத்தை தெளிய வைத்திருப்பேன்.

என்னிடம் இருந்ததெல்லாம் இயற்கையின் பால் ஆர்வம்..
ஆர்வம் காதலானது. காதல் புரிதலானது. இயற்கை தன் மர்மங்களையெல்லாம்
வெளிச்சமிட்டது..

இவற்றை இங்குமக்கு அஞ்சல் செய்ய

நான் தேவனாகிட முடிவு செய்தால் பார்ப்பனர்கள் 4 சுவர்களுக்குள் என்னை சிறைவைத்து விடுவார்கள்
நான் அரக்கனானால் .........
முப்பது முக்கோடி தேவர்களில் எவனோ ஒருவன் என்னை சம்ஹரிக்க வந்துவிடுவான்
மனிதனாக வாழப் பார்த்தேன்..
நான் மிருகமாக மாறிவிடாதிருக்கவே
என் ஞானத்தின் பாதியை செலவழிக்க செய்துவிட்டீர்கள்.

உலகை நீங்கள் தவணையில் அழித்தீர்கள்
அது மொத்தமாக அழிக்கப்போகிறது..
அதிகாலை விழிப்பீர்கள்
அவைகளைப் போல் வாழ்வீர்கள் என்று
பறவைகளை காட்டினேன்..
நீங்களோ அவற்றை வேட்டையாடினீர்கள்
என்னிலான கருணைக்கு ஒரு கணமும் ஓய்வில்லாது குறி வைத்தீர்கள்
அதை காப்பற்றிக் கொள்ளவே உங்கள் காவலன் என் காலம் வீணாகி விட்டது..

பெண்கள் ..ஷிட்!
தத்தமது தந்தையரின் நகல்கள் என நம்பி  காதலரையும் ,கணவன்மாரையும் தேர்ந்தெடுத்து
பால்யத்தில் தம் தந்தை மாரை வாட்டியது  போலவே
கணவன்  மாரை கசாப்பு செய்யும் சேடிஸ்டுகள்

ஆண்கள்...ஷிட் !
பாலியத்தில் தம்மை சுமந்த தாயின் நகல் என நம்பி காதலி, மனைவிமாரை தேர்வு செய்து  முன்னர் தம் அன்னையருக்கு தாம் செய்த துரோகங்களுக்கு தண்டனை
அனுபவிக்கும் அப்பாவிகள்..

குழந்தைகள்.. தம் பெற்றோரின் ஜிராக்ஸ் பிரதிகள்

உங்களை அழிக்காதிருக்கும்படி
காலத்தின் கைகளில் ஒரு கருணை  மனுவைக் கொடுக்கவும்
முடியாத நிலைக்கு என்னைத் தள்ளிய மனிதர்களே!
 நாளை அழிவு ! தூங்குங்கள்!

விழிப்பிலும் நீங்கள் செய்தது அதைத்தானே..
நான் விழித்திருக்கிறேன்
தூக்கத்திலும் நான் செய்தது அதைத் தானே