Wednesday, September 1, 2010

நல்ல தீர்ப்பு

புலி மேல் ஏறி புவனமெலாம்
ஆளும் அன்னை புவனேசி ( மதில் மேல்)
பூனை என்னை வெருட்டுதலோ. ?
பழிச்சொல் பலவும் உருட்டுதலோ?
உன் இடம் விட்டு  எதிர்புறம் வந்து
என் பகையொடு சேர்ந்து வெருட்டதலால்
உன் புறம் குதிப்பேன் என்றல்லோ
ஏழை என்னை வெருட்டுகின்றாய்.

நின் பாசம் அறிவேன் பராசக்தி !
நின் அருளின்றேல் நான் வெறும் சகதி
உன் அருளாலே உன் அருள் வேண்டி
என் மருள் யாவும் நான் தாண்டி
மதில்வரை வந்தேன் காணலியே

மாதா உந்தன் நகையொலி தான் அவ்வப்போது கேட்கிறது.
கொலுசொலி சற்று கசிகிறது. நம்பிக்கை மட்டும் நசிகிறது
திருமுகம் ஆயிரம் நான் வரைந்தும் - நின்
திருமுகம் காட்ட மறுக்கின்றாய்.

வந்த வழியென் சொந்தவழி
காற்றில் பஞ்சு போன வழி
நின்  நுதல் வீசும் ஒளியாலே
மதில் வரை வந்தேன் தாயே கேள்

அவ்வப்போது மயங்கிடினும்
நானோ என்று தயங்கிடினும்
முற்றும் உணந்தேன் உமையவளே
மூடன் நானோ இமயவளே

விரல் அது இங்கு எனதெனினும்
குரல் அது என்றும் உனதன்றோ?
என் நலம் நாடி நிர்மலம் எய்த
ஊர் மலம் யாவும் சொரிவித்தாய்
அறிவேன் அறிவேன் நானிங்கே

தருமம் ,மருமம் யாவும் தான்
தாயே எனக்கு புரிவித்தாய்
கருமம் ஒழிக்கும் வித்தையைத்தான்
விளக்கமாக தெரிவித்தாய்

என் நாவில் நின்று நடம் புரிந்தாய்
வாக்கினூடே பயணித்தாய்.

காவியம் செய்ய  நான் முனைந்து
பட்டபாடு நீயறிவாய்.
நின் அவைக்கே அதனை அனுப்பி வைத்தும்
அடை காத்தல் ஒன்றே செய்திட்டார்

உரையில் என்றால் மேய்ந்திடுவார் -
உரையில் உன்னத சிகரம் தொட முனைந்தால்
உரை நடை கூட உறைக்கா உலகில்
கவி மழை பெய்து பயன் என்ன?

உரை  நடை தானே என்றெண்ணி
என்னை பேச பதறிடுவார்
உன்னை பேச உதறிடுவார்

என் வாக்கில் நின்ற உனக்கே தான் வேலை தந்திட
நான் நினைந்து வரும் பொருள் உரைக்க முனைந்திட்டேன்.

பற்பல வழக்கில் முன்னுரைக்கே
பாரோர்  நல்ல தீர்ப்பு வழங்கிட்டார்
யாவும் உன்னருள் நானறிவேன்

இது ஒரு வழக்கில் மட்டும் தான்
சிக்கல் என்பது உருவாச்சு.

என் அகந்தை துடைக்க அம்மாவே
அதிரடி செய்ய இறங்கிவிட்டாய்.
என் நாவில் சற்றே உறங்கிவிட்டாய்.

காஞ்சனம் கையால் தொட்டபின்னே
கருமம் தொலைக்காதிருந்திட்டால்
பாவம் என்னை சூழாதோ?
பாவி உலகம் இகழாதோ?

காசும் பணமும் வந்திவனே நீர்த்தான் என்று நினைந்தாயோ?
புது நாடகம் ஒன்றை புனைந்தாயோ?

தாங்காதம்மா தாங்காது
இழி சொல்லை என் மனம் தாங்காது.

மக்கள் கூட்டம் எனை சூழ வரும் பொருள் என்பது
என் வியூகம்.
கூட்டம் பெருத்து எனை தொடர லட்சியம் சொல்வேன் சரியாகும்.

தொழில் என்றெண்ணி விலகினையோ - மனத்
தழல் தணிந்த  தென்றே தவிர்த்தனையோ

பாரத நாட்டில் பசியதுவே ஒழிந்தாலன்றி தணியாது
என் நெஞ்சம் வாழும் அத்தழலே

அருள்வாய் அம்மா அருள்வாயே
என் வாக்கில் வந்து அமர்வாயே.

ஓம் சக்தி.