Tuesday, April 27, 2010

கலைஞர் திமுகவுக்கு 'ஜெ' வை தலைவியாக்கினால் என்ன?

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.

என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி  நேரத்துல பசங்க கொளுத்தற  பூத்தொட்டி  மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா  கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு  வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.

உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு.  அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே  அதோட உங்க உள்ளீடு .. காலி.

நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம்  காரணமா  தவற விட்டுட்ட பொது நலத்தை,  காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.

இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.

திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை.  நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.

சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு  பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.

தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே  ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.

இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"

இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து)  கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.

இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார்.   நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட  இறுதி பத்தில  நானே சொல்றேன்)

குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான  குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் ) 

மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!


உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.

(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல  விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)

9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.

கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல  பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.

ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.

பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும்  பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி   உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த  சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.

சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..

சரி இது கூட  ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..

ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.

நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.

மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல 

கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில  உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன)  பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,

பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும்  " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற  ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட

உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே  இத்தனை காலம் கட்டிக்காத்த


ஜெயலலிதாவை  திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?

குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத  குறளா ?  ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா? 


வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின்  இழி நிலை மாறுமல்லவா?

உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக  இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள்.  என்ன  சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?