Thursday, August 9, 2007

சிவாஜியும் ஜோதிடமும்

கீதாச்சாரியன்,இந்து மித்திரன் தவிர எல்லாரும் சிவாஜி படத்தை விமர்சித்துவிட்டார்கள் என்று சுஜாதா எழுதியுள்ளது நிஜமே. ஆந்திர நீதிபதிகள் கூட உலகமே பார்த்த பின்னாடி தடை கேட்கறிங்களே என்று கூறியிருக்கிறார்கள்.(படத்தில் சோனியா படத்தின் பக்கத்தில் வில்லனான சுமன் படத்தை காட்டியதற்காக காங்கிரஸ் கட்ச்சியினர் தடை கேட்டு கோர்ட்டுக்கு போனது தெரிந்ததே.)

இருந்தும் இந்த கட்டுரையை வலைதளத்தில் வைக்க காரணம் நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்பதே. சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.

*இனி சிவாஜி பஞ்சாயத்துக்கு வருவோம். ஒரு பெண்ணிற்கு ஜாதகத்தில் கடும் தோஷம் உள்ளது. இதனால் கணவனுக்கு கண்டம் வரும் என்பது கதை. ரஜ்ஜு பொருத்தம் வேறு இல்லையாம் . எனவே கணவன் ஆபிச்சுவரியில் வருவது நிச்சயமாம். ஜோதிடருக்கு நாக்கில் மச்சமாம். எனவே அவர் சொல்வது நிச்சயம் பலிக்குமாம்.

ஜோதிட ஆய்வு என்பது பிராமணர்களின் சேப்டி லாக்கரில் இருந்து சூத்திரர்கள் கைக்கு மாறி பலகாலம் ஆயிற்று. பிராமணர்களை திதி பார்க்க மட்டுமே மக்கள் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி அபிமானத்தில், சூத்திரர்களின் வசம் போய்விட்ட ஜோதிடத்தை கேலிக்கிடமாக்கிவிடவேண்டும் என்ற தகிப்பினால் மேற்படி முடிச்சை சிவாஜி படத்திற்கு சுஜாதா பரிந்துரைத்திருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தம்:

திருமண பொருத்தம் என்பது முதலில் ஆண், பெண் ஜாதகங்களை வைத்து பார்க்கப்படவேண்டும். பெண் ,பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும். பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்),தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும்.

தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும். படத்தில் பெண்ணின் ஜாதகம் மட்டுமே ஜோதிடரிடம் காட்டப்படுகிறது. அவரோ தன் நாக்கில் உள்ள மச்சத்தை மட்டுமே தகுதியாக கொண்டு பலனை அள்ளி வீசுகிறார்.

மச்சத்துக்கு காரகர் ராகு. ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ அந்த பாகத்தில் மச்சம் ஏற்படும். நாக்கு என்பது 2 ஆமிடம். ஜாதகத்தில் 2 ஆமிடத்தில் ராகு நின்றால் நாக்கில் மச்சம் ஏற்படும்.
2 ஆமிடத்தில் ராகு வாக்கு பலிதத்தை எப்படி கொடுப்பார்?. வாக்கு தவறுதல்,பசி,பட்டினி,விஷம் குடித்து சாதல்,குடும்பத்தை விட்டு வெளியேறுதல் போன்ற கெட்ட பலன் களைத்தான் தருவார். நாக்கில் மச்சமிருப்பவர் சொன்னது பலிக்கும் என்பது தவறு.

வெறுமனே பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்துவிட்டு பலன் சொல்லும் ஜோதிடர் நிச்சயமாக ஒரு பொய்யராகத்தான் இருக்க வேண்டும். பெண் ஜாதகப்படி கணவனுக்கு தோஷம் இருந்து விட்டால் போதாது. அவனுடைய ஜாதகமும் அற்பாயுள் ஜாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மரணம் ஏற்படும்.

அதிலும் ஜோதிடவியலை பொறுத்தவரை ம்ரணம்,சிறை,பிரிவு, ஐ.பி போடுதல்,தலை மறைவாதல்,தனிமை எல்லாமே சமமான பலன் களாகும். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதில் தோஷம் இருந்த மாத்திரத்தில் கணவன் செத்துத்தான் போவான் என்று எந்த ஜோதிடனும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அவன் பொய்யன்.நாஸ்திகன். ஜாதகத்தை பார்த்து பலன் சொன்னாலே இது நிலைமை.

ரஜ்ஜுப்பொருத்தம்:மேலும் படத்தில் ரஜ்ஜுபொருத்தம் பற்றியும் ப்ரஸ்தாபனை வருகிறது. ஏக ரஜ்ஜு வருவதால் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. ரஜ்ஜு என்பது முக்கியமான பொருத்தம்தான் இல்லை என்று கூறவில்லை. அதற்காக மரணம் என்று ஒருவரியில் கூறுவதும்,அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கேற்ற மாதிரியே நடப்பதும் தான் ஜோதிடத்தை கேலிக்கிடமாக்குகிறது.

மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை-பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
ஜாதகப்பொருத்தம் பார்க்க ஆண், பெண் ஜாதகங்களை பார்த்தாக வேண்டும்.

சிவாஜி ஜோதிடர் பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்து விட்டு,ரஜ்ஜு பொருத்தம் இல்லை மரணம் நிச்சயம் என்று கூறுகிறார்.
அவர் சொன்னது போலவே நடக்கிறது.

பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் , அதிலும் அறிவு ஜீவியும், பிராமணருமான சுஜாதா வேறு டீமில் இருக்கிறார். ஒரு கிளி ஜோசியரை வரவழைத்து சிங்கிள் டீ வாங்கி கொடுத்து கேட்டிருந்தாலும் விஷயத்தை சொல்லியிருப்பார்.

அதைக் கூட செய்யாது சுஜாதா பாஷையில் சொன்னால் ஜல்லியடித்து, வேதங்களின் அந்தர் பாகமான ஜோதிடத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை வெகுஜன மீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்.