Tuesday, August 28, 2007

உங்களை மறுத்துவிட்டேன்.


நீங்கள் எழுதும் கவிதையில் வாழ்க்கை இல்லை.

உங்கள் வாழ்க்கையில் கவிதை இல்லை

நீங்கள் பூட்டிவைக்கும் கோவில்களில் தெய்வம் இல்லை

உங்கள் தெய்வங்களில் மனிதம் இல்லை

ஆண்களில் ஆண்மையில்லை

பெண்களில் தாய்மை இல்லை

உங்களை பெற்றோர் வலிவும்,பொலிவும் பெற்றோரில்லை

அதனால் தான் உங்கள் இதயம் மலரவில்லை

நிலத்தின் ரத்த ஈரம் உலரவில்லை

பத்தோடு பதினொன்று உங்கள் பிறப்பு

இதற்கு பொறுப்பில்லாத உங்கள் பெற்றோரும் பொறுப்பு

அவர்களின் வளர்ப்பில் நீங்கள் வளர்ந்தீர்களே

தவிரஉங்களில் எதுவும் வளரவில்லை

உங்கள் பள்ளிகளில் கல்வி இல்லை

உங்கள் கல்வியில் ஞானமில்லை

உங்கள் வியாபாரங்களில் நேர்மையில்லை

உங்கள் நேர்மையிலும் வியாபாரம் இல்லாமல் இல்லை.
உங்கள் அரசில் நிர்வாகமில்லை.

நிர்வாகத்தில் நீதியில்லை

உங்கள் நீதியில் பேதம் இல்லாமல் இல்லை.

உங்கள் காமத்தில் காதல் இல்லை

உங்கள் காதலில் காமம் தவிர வேறில்லை.

நீங்கள் என்னை முழுமையாக மறுக்கும் முன்

நானே உங்களை மறுத்துவிட்டேன்.

உங்களுடனான் தொடர்பை அறுத்துவிட்டேன்