Sunday, August 1, 2010

வாஸ்து ரகசியங்கள்: 4

கடந்த பதிவுல மனை ஏன் சதுரமாவோ ,செவ்வகமாவோ மட்டும் இருக்கனும்னு விவரிச்சிருந்தேன். ஓரளவு விஷயம் தெரிஞ்சவுக தத் என்னடா இது ஒரே ஒரு பாயிண்டை வச்சுக்கிட்டு நை நைனு மொக்கை போட்டிருக்காருனு நினைச்சிருப்பாய்ங்க. அதுக்கு வட்டியும் முதலுமா இந்த பதிவுல நிறைய சரக்கை திணிச்சிருக்கேன். மொதல்ல நான் சொல்லப்போற சங்கதிங்க மேல நம்பிக்கை வரணுமே அதுக்காவத்தான் அத்தனை மொக்கை.

(விஷயம் தெரிஞ்சவுகனு சொன்னேனே இவிகளுக்கு டேட்டா கலெக்சன்ல இருக்கிற ஆர்வம் அதுக்கான பின்னணி காரண காரியங்களை தெரிஞ்சுக்கறதுல இருக்காது. நிறைய ஜோசியர்கள், வாஸ்துகாரவுக சைக்காலஜியும் இதான். இவிகல்லாம் புஸ்தவ அலமாரி மாதிரி. ஏன் எதுக்கு எப்படின்னெல்லாம் ரோசிக்கவே மாட்டாய்ங்க)

இன்னைக்க்கு இது இளைஞர்களோட யுகம். இளமைல சக்தி ஊற்றெடுக்கும். இந்த வயசுல அவிக ஏத்துக்க கூடிய அளவுக்கு காரணம் சொல்லாம  அங்கன போவாத, அப்படி பண்ணாதனு தடுத்தா அவிகளுக்கு  நவதுவாரமும் எரியும். நாம காரண காரியங்களோட விவரத்தை சொன்னா அதை அவிக ஃபாலோ பண்ணிக்கற சான்ஸ் இருக்கு.

அந்த காலம் மாதிரி மங்களம், லட்சுமிகரம் அல்லது  பீடை. தரித்திரம் ஒரு வார்த்தை தீர்மானம்லாம் போட்டா  "போடாங்கொய்யாலன்"னுட்டு போயிருவாய்ங்க. 1990 மார்ச்ல  நான் ஆஃபீஸ் போட்டப்ப கிழவாடிங்களுக்கு நம்ம கெட் அப்,செட் அப், சிகரட் இதான் தெரிஞ்சதே தவிர மண்டைக்குள்ள இருக்கிற சரக்கு உறைக்கலே. அதனால நானே ஒரு புது மார்க்கெட்டை க்ரியேட் பண்ண வேண்டி வந்தது.அதுக்காக என்னோட மைண்ட் செட்டை மாத்திக்கிட்டேன். (மேலும் அந்த வருசம் நான் கூட இளைஞன் தானே)

அதனாலதான் ஒரு இளைஞர் கூட்டம் என்னைத்தேடி வர ஆரம்பிச்சுது. (இன்னைக்கு அவிகல்லாம் தலையில வழுக்கை வாங்கி, பிருஷ்டம் பிதுங்க, தொந்தி போட்டு கிழவாடிங்க ஆயிட்டாய்ங்க. அது வேற விஷயம். இன்னைக்கும் இன்னொரு தலைமுறை நம்மை தேடிவந்துக்கிட்டிருக்க   காரணம்  , நாம  காரண காரியங்களை விளக்கறதுதான். அப்டேட்டடா இருக்கிறதுதான். காரணம் மாறிப்போச்சுன்னா காரியமும் மாறவேண்டியிருக்கு. காரணமே தெரியாம போயிட்டா அந்த காரணம் இல்லாம போன பிறகும்  நீங்க காரியத்தை செய்துக்கிட்டே போனா அது விரயம்.

சின்ன உதாரணத்தை பாருங்க. வெள்ளிக்கிழமை விளக்கு வச்ச பிறவு குப்பைய வெளிய கொட்டக்கூடாது. விளக்கு வச்ச பிறவு பணம் கொடுக்க கூடாது. சோசியம் பார்க்ககூடாது. இதெல்லாம் அந்த காலத்துல பெரியவங்க சொல்லி வச்சதுதான். இல்லேங்கலை. ஏன் எதுக்குனு எந்த பன்னாடையும் ரோசிச்சதில்லை. ஈயடிச்சான் காப்பிதான். ஜஸ்ட் ரி டெலிகாஸ்ட் தான்.

வெள்ளிக்கிழமை எல்லா பெண்களும் எண்ணெய் தேச்சி குளிப்பாய்ங்க (இப்ப இதயம் நல்லெண்ணெய் காரவுக தலைதலையா அடிச்சிக்கிட்டாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) தங்க நகைல எண்ணெய் இறங்கிரும்னு கழட்டி வைப்பாய்ங்க. ஆத்திரம் அவசரத்துல மூக்குத்தி,கம்மல் எட்ஸெட்ராவோட திருகாணிங்களை  கழட்டறச்ச  கீழே விழுந்துருக்கலாம்.

அந்த காலத்துல இப்போ மாதிரி வெளிச்சத்தை வாரி வீசற ட்யூப் லைட்டெல்லாம் ஏது? விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி கட்டாயம் பெருக்குவாய்ங்க. ( இப்போ மாதிரி மெகா சீரியல் எல்லாம் கிடையாது)  கீழே விழுந்த திருகாணிங்களையும் சேர்த்து  வாரி கொட்டிட்டா என்ன பண்றது? குப்பைய வெளிய கொட்டாம வீட்டுக்குள்ள வச்சிருந்தா சனிக்கிழமை வெளிச்சத்துல பார்த்து பொறுக்கிக்கலாம்னு இந்த ரூலை வச்சாய்ங்க.(பாவம் தமிழ் ஓவியா மேடத்துக்கு இந்த மேட்டரெல்லாம் தெரியாது. கிழி கிழினு கிழிச்சிருக்காய்ங்க.)

இப்பபண பட்டுவாடா மேட்டரை பாருங்க . அப்பல்லாம் நடுவுல ஓட்டையிருக்கிற நாணயம் தான். ஒரு கம்பில கோர்த்து வச்சிருப்பாய்ங்க. சைட்ல பார்த்துதான் வேல்யூ தெரிஞ்சிக்கிடனும். பட்டுவாடா பண்றப்ப வெளிச்சம் இல்லாம (புட்டிவிளக்கு?) ஜாஸ்தி கம்மியா கொடுத்துட்டா வில்லங்கமாயிரும்னு இந்த ரூலை வச்சிருப்பாய்ங்க.

சோசியமும் இப்படித்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல  சனி - சந்திரன், சூரியன் - சுக்கிரன்லாம் ஒரே மாதிரி தென்படும்.அதனால தான் ராத்திரில பார்க்ககூடாதுன்னு ரூல். ஒரு வேளை ராத்திரில பாவ கிரகங்களுக்கு பவர் ஜாஸ்திங்கறதால சோசியர் பாவகிரகங்களோட பலனை ஏடாகூடமா சொல்லப்போயி பார்ட்டி டர்ராயிருவாருங்கறதுக்காகவும் இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கலாம்.

மனை சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனும்னு மொட்டையா சொல்லியிருந்தா அது அந்த அளவுக்கு சனங்க மனசுல பதிஞ்சிருக்காது. மனை ஏன் சதுரமாவோ,செவ்வகமாவோத்தான் இருக்கனுங்கறதுக்கு காரணங்களா  நான் சொன்ன 16 பாயிண்ட்ல பாதி ஞா இருந்தாலும் யாரும் இந்த ரூலை மீறமாட்டாய்ங்க. இப்ப புரியுதுங்களா ஏன் இந்த அளவுக்கு மொக்கைன்னு.

என் பேரு மிஸ்டர் ரைட்டு. என் பேச்சு ரொம்ப கரெக்டுங்கறதுக்கு ஒரு சின்ன நிகழ்ச்சியை உதாரணம் காட்டிட்டு மேட்டருக்கு வந்துர்ரன். டோன்ட் ஒர்ரி.

வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்ல நான் மேற்கோள் காட்டி விளக்க உபயோகிச்சிருக்கிற /உபயோகிக்கப்போற  "கட்டிடக்கலை ஒரு அறிமுகம்" நூலாசிரியர் கே.வி.முனி தொடர்பான ஒரு வில்லங்கபதிவை தனியே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க


இப்போ வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு  மனைய தேர்வு செய்ய கே.வி முனி கொடுத்திருக்கிற நிபந்தனைகளை பார்ப்போம்: (அடைப்பு குறிக்குள்ள நம்ம இன்டர் ப்ரட்டேஷன் நிச்சயம் உண்டு)

திசைகளை தெரிந்து கொள்ளுங்கள்:

மொதல்ல வாஸ்துவுக்கு அடிப்படையான திசைகளை பற்றி சின்ன விளக்கம். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. (கிழக்கை பார்த்து நில்லுங்க)  இப்ப உங்க பின்னாடி இருக்கிற திசை மேற்கு. வலது புறம் இருக்கிறது தெற்கு. இடது புறம் இருக்கிறது வடக்கு. ஓகேவா.

ஈசான்யம் - ஆக்னேயம்:

உதாரணத்துக்கு ஒரு மனையை எடுத்துப்போம்.  இதனோட நீளம் 90 அடி. அகலம் 90 அடி( 90X90)  அடினு வைங்க

மொதல்ல கிழக்கு திசைய பாருங்க. இந்த பக்கம் மனையோட நீளம் மொத்தம் 90 அடியில்லயா?  இதை 9 பாகமாக்குங்க. ஒவ்வொரு பாகத்துக்கும் பத்து அடி வரும்.

கிழக்கு  திசைல இடது  கை பக்கம் உள்ள  முதல் ரெண்டு பாகத்தை  அதாவது இருபது அடியை ஈசான்யம்/ வடகிழக்கு/ஈசான மூலைனு சொல்றோம்.

வலது கை பக்கம் உள்ள கடைசி  ரெண்டு பாகத்தை அதாவது இருபது அடியை ஆக்னேயம்/தென் கிழக்கு/ அக்கினி மூலைனு சொல்றோம்.

வலது கைபக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. இடது கைப்பக்கம் இரண்டு பாகம் 20 அடி போச்சு. ஆக 20+20 மூலைகளுக்கு போச்சு .மனையோட  மொத்த நீளம் 90 அடி. இந்த 90 அடில 4 பாகம் அதாவது 40 அடி மூலைகளுக்கு போயிட்டா மத்தில மிச்சமிருக்கிற 5 பாகம் அதாவது  5X10 அடி ( 50 அடி) தான் முக்கிய திசை.

இப்போ இன்னும் எளிமையா சொல்றேன் . மொதல்ல இடது கோடிலருந்து அளக்கிறிங்க.1 முதல்  20  அடி ஈசானம்.  அடுத்து வலது கோடிலருந்து  20 அடி அளக்கறிங்க இது ஆக்னேயம். மத்தில இருக்கிற 50 அடி கிழக்கு திசை (முக்கிய திசை)
புரியுதுங்களா.

நைருதி - வாயு:

இப்போ  மேற்கு பக்கமா நின்னிங்கன்னா வலது பக்கமுள்ள இரண்டு பாகம்  (20 அடி) வாயு மூலை/வடமேற்கு , இடது பக்கமிருக்கிற இரண்டு பாகம் (20 அடி)  நைருதி/ தென் மேற்கு/கன்னி மூலை. மத்தில இருக்கிற 50 அடி மேற்கு திசை .

இதே ஃபார்ம்லாவுல  மிச்சமுள்ள வடக்கு, தெற்கு பக்கமாவும் கேல்குலேட் பண்ணி  முக்கிய திசை,  மூலைகளோட அளவுகளை கரீக்டா குறிச்சிக்கங்க

இதுல தேறினா தான் அடுத்து வரக்கூடிய நிபந்தனைகளையெல்லாம் படிச்சு புரிஞ்சிக்க முடியும். உங்க வீட்டுக்கோ மனைக்கோ அப்ளை பண்ணி பார்க்கமுடியும்.

வாஸ்து உலகத்துல மூலைகளை குறிப்பிடறதுல  பிரபலமா இருக்கிற ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான்யம்ங்கற வார்த்தைகளையே உபயோகிக்கபோறேன். (ஒடனே தமிழ் துரோகின்னிராதிங்க. )

(உங்களுக்கு விளக்கமா புரிய ஒரு ஸ்கெச்சையும் ஸ்கான் பண்ணி வச்சிருக்கேன் தலை!)

இப்போ நிபந்தனைகளை பார்ப்போமா? (உபயம்: கே.வி.முனி ) (உதாரணம், விளக்கம் அடியேன்)

1.மனைக்கு ஆக்னேயம், தெற்கு, நைருதி, மேற்கு,வாயு திசைகள்ள 25 அடிகளுக்குள்ளாற சேந்து கிணறு இருக்ககூடாது ( ஊர்ல சேந்து கிணறே கிடையாது முருகேசன்ங்கறிங்களா? கலிகாலம்)   150 அடிகளுக்குள்ள பெரிய பம்ப் செட் கிணறு எதுவும் இருக்கக்கூடாது. 200 அடிகளுக்குள்ள பெரிய பள்ளம், பெரிய கால்வாய், கானாறு, ஆறு குளம் இத்யாதியிருக்க கூடாது. 500 அடிகளுக்குள்ள ஏரி இருக்க கூடாது.

விளக்கம்:
இதுல நைருதில பம்ப்செட் கிணறு இருக்கிற வீட்டை மட்டும் டேக்கிள் பண்ணேன் பாஸு. ஹவுஸ் ஓனர் மொதல்ல ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிட்டான். ( தீர்காயுசு ஜாதகம்ங்கறதால உயிர் பிழைச்சது) பெண்டாட்டிக்கு மென்டலாயிருச்சு. பெரிய பையன் அல்ப்பாயுசுல போயிட்டான். சின்னப்பையன் வீட்டை விட்டு போய் ஏழெட்டு வருஷம் கழிச்சு வீடு திரும்பினான். ராசி கன்னி. ஜாதகமே லிட்டிகன்ட் ஜாதகம். சரியான நாமர்தா. இவன்தான் தன்  நண்பர்கள் மூலமா நம்மகிட்டே வந்தான்.

போய் பார்த்தேன். வீட்டுக்கும் கிணற்றுக்கும் 25 அடி கூட டிஸ்டன்ஸ் இல்லே. கிணறு பார்ட்டிக்கு சொந்தமானதில்லை. என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி அதை விக்க வச்சேன். (தொண்டைல இல்லிங்கண்ணா) . வேற ஒரு ஏரியால சுமாரான வாஸ்து இருக்கிற வீட்ல குடிவச்சேன். இதெல்லாம் நடந்து  11 வருஷம் ஆச்சு. பையனுக்கு கல்யாணமாச்சு. அம்மாக்காரி மருமக கூட சண்டையெல்லாம் போடற அளவுக்கு பையனை தனிக்குடித்தனம் வைக்கிற  அளவுக்கு தெளிவாயிட்டாள்.

ஆன்டி க்ளைமாக்ஸ்:
இந்த வருஷம் கொஞ்சம் போல பணம் புரட்டி மனை வாங்கி வீட்டை கட்டினாய்ங்க.  நைருதியை காலியா விட்டு , நைருதிலயே தலைவாசல் வச்சு கட்டியிருக்காய்ங்க. சமீபத்துல  ரிஷபத்துல (?) அஷ்டகிரக கூட்டு ஏற்பட்டுதே அந்த சந்தர்ப்பத்துல மேஷ லக்னத்துல பிறந்த டிக்கெட் ஒன்னு வேற அந்த வீட்ல இருக்கு. மேஷத்துக்கு ரிஷபம் ரெண்டாவது ராசி. ரெண்டுல உள்ள கிரகங்கள் எல்லாம் ஆயுள் ஸ்தானமான எட்டை பார்க்கும்.

நீதி:
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும். ஒரு மனுசன் பிறக்கும்போதே அவன் எந்த மாதிரி வீட்ல வசிக்கனும்னு டிசைட் ஆயிருது. ஜாதகப்படி நல்ல நேரம் வந்தப்ப இடம் மாறினாலும் (வித்தே தொலைச்சாலும்) நல்ல நேரம் முடிஞ்சதும்  அதே இடத்துலயோ அ அதே மாதிரி வாஸ்து உள்ள இடத்துலதான் வசிக்கனும்.

2.மனைக்கு வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள 75 அடிக்குள்ள பாறை,மணற்குன்று, பெரிய மரங்கள்,பாலங்கள் இருக்ககூடாது.

விளக்கம்:
வடகிழக்குல மாடிப்படிகள் இருந்ததால நொண்டியடிச்ச  ஃபேக்டரி ஒன்னை பத்தி சொல்றேன்.பாறை, பாலத்தால அடிப்பட்டு போன சக்தி வாய்ந்த  அரசியல் குடும்பத்தை பத்தியும் பார்க்கலாம்.

மொதல்ல ஃபேக்டரி:
ஃபேக்டரி ஓனர் காலி ( 40 வயசுக்குள்ளயே). அம்மாதான் மெயின்டெய்னென்ஸ்
( அம்மா ஜாதகத்துலயும் மாங்கலிய தோஷம் உண்டு. காங்கிரஸ் ,பி.ஜே.பி கூட்டு வச்ச மாதிரியில்லே?)  எப்பப்பாரு வேலைக்காரங்க நிக்கறதில்லை, வேலைக்காரவுகளுக்கு விபத்து,ஆஸ்பத்திரி செலவு, சொந்தக்காரவுகளோட வெட்டுப்பழி குத்துப்பழி, இவிக வீட்ல மிஞ்சினதை தின்னுக்கிட்டு இருந்த மொடாக்குடியனான  தம்பியோட  பெண்டாட்டி படக்குனு சவுண்ட் பார்ட்டியாகி இந்தம்மாவ நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டான்னா பாருங்களேன்.

பொண்ணு படிப்புக்காக வெளியூர் போயி(அதானல வாஸ்து தோஷத்துலருந்து தப்பிச்சுட்டாள் போல) , அங்கனயே வேலை வந்து பை நிறைய சம்பளம்.  அந்த பெண்ணோட அழகுக்கும்  ( தேவதை), படிப்புக்கும் (சரஸ்வதி) , சொத்துக்கும் ( லெட்சுமி) எப்படா 18 முடியும்னு காத்திருந்து கொத்திக்கிட்டு போவனும். ஆனால் கண்ணாலம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதுக்கு ஒரு தம்பி. அவனும் மார்க்கெட் வேல்யூ இருக்கிற படிப்பை தான் படிச்சான். முடிச்சான். வேலை வெட்டி மூச். ஒரு லாப் டாபை வச்சிக்கிட்டு நோண்டிக்கிட்டிருப்பான். வேப்பிலை அடிச்சு அடிச்சு, சொல்லி சொல்லி ஈசானத்துல இருந்த மாடிப் படியை (இத்தனைக்கும் மொட்டை மாடிதான் ) இடிச்சி முடிக்க பத்துவருசமாச்சு. இந்த வருஷம் தான் இடிச்சாய்ங்க. பொண்ணுக்கு கண்ணாலம் ஆயிருச்சு. பையனும் இன்னைக்கோ நாளைக்கோனிருக்கான் ( வேலைக்கு போய் சேர பாஸு)

சித்தூர்ல நாயுடு பில்டிங்ஸ்னா பெத்த பேரு.  எந்த கட்சியா இருந்தாலும் இவிக குடும்ப உறுப்பினர்கள் தான் வேட்பாளர்கள். ஜெயிச்சும் வருவாய்ங்க. ஒரு அரை டஜன் பேரு எம்.பி,ராஜ்யசபா எம்பி, எம்.எல்.ஏனு இருந்தாங்கன்னா பாருங்களேன். தாளி இவிக காம்ப்ளெக்ஸுக்கு வடக்குல ஒரு ஓவர் பிரிட்ஜ் வந்தது. படிப்படியா அரசியல்லருந்து இவிக காணமயே போயிட்டாய்ங்கன்னா பாருங்களேன்.இந்த  பாலம் அமைஞ்ச திசை இவிக அரசியல் எதிரியோட வீட்டுக்கும், தோட்டத்துக்கும் தெற்கா போச்சு.  25 வருஷத்துல ஒரே ஒரு தடவை தான் அதுவும் அஷ்டம சனில தோல்வியை தவிர வெற்றி  நடைதான்.