Friday, July 10, 2009

சபிக்கப்பட்ட வம்சங்கள் ‍ பொய்க்கும் ஜோதிடம்

நானும் மனிதாபிமானம் மிக்கவன் தான். விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று எண்ணுபவன் தான். ஜோதிடம் கற்றதும், நூதன பரிகாரங்களை கண்டுபிடித்ததும் இதற்காகத்தான். (உண்மையில் இவை என் கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு சம்சயம் உண்டு. காரணம் சில ஜாதகர்களின் வாழ்வில் தெய்வாதீனமாய் அரங்கேறியவையே) ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது 99.9 சதவீத ஜாதகர் வாழ்வில் பலிக்கும் ஜோதிடம் சில சபிக்கப்பட்ட வமிச‌ங்கள் வாழ்வில் மட்டும் பொய்த்துப்போவது உறைக்கிறது .

1.பெண்களை கொடுமைப்படுத்தும்,பல தார மணம் புரியும்,வமிசங்களில் பிறக்கும் குழந்தைகள் (ஆண் பெண்) யாவுமே செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம்,சுக்கிர தோஷத்துடன் பிறக்கின்றன. எந்த வமிசத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன்பே இறக்கிறார்களோ?‌

சிறுவயதில் விதவைகளாகிறார்களோ, இரண்டாம் மனைவி அ ஆசை நாயகியராய் வாழ்ந்து மடிகின்றனரோ அக்குடும்பத்திலும் மேற்கண்ட தோஷங்களுடனேயே குழந்தைகள் பிறக்கின்றன.

2. கோவில் நிலத்தை,அண்ணன் தம்பி நிலத்தை,புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் குடும்பங்களில் ஊனத்துடன் பிறத்தல், பெரும் விபத்துகளில் சிக்குதல் கூட நடைபெறுகின்றது. முக்கியமாக செவ்வாய்,சனி சேர்க்கையை இந்த குடும்பத்து ஜாதகங்களில் பார்க்கமுடியும்.

3.இந்த குடும்பங்களில் ரொட்டீணாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் :
துர்மரணம்(விபத்து,தற்கொலை),அகால மரணம்(அற்பாயுளில் இறப்பது),இடம் பெறும். கோர்ட்டு வழக்குகள் தொடர்ந்து வரும். திருமணங்கள் தள்ளிப்போகும். ஒருவேளை நடந்தாலும் தம்பதியிரிடையே ஒற்றுமை இருக்காது. சந்தானமிராது. முக்கியமாக ஆண் குழந்தை பிறக்காது.

இது போன்ற குடும்பத்தினருக்கு பலன் கூறும்போது நற்பலன்களை குறைத்தும்,கெடுபலன்களை உள்ளது உள்ளபடியும் கூற வேண்டும். பரிகாரங்களை கூட முழு வீச்சில் கூறவேண்டும். (உதாரணமாக: வெள்ளிக்கிழமை அம்மனையும்,திங்கள் கிழமை கணபதியையும் வழிபடுங்கள் ‍/சர்ப்பதோஷ பரிகாரம் இது/ என்று கூறக்கூடாது. தினசரி ஐந்து வேளை என்று கூற வேண்டும்.