Sunday, July 19, 2009

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதனிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது
அவர்கள் பாலரை பட்டினி போட்டு செய்தனர் பாலாபிஷேகம்

ஆனால் நீயோ ..... பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அஞ்சல் செய்து
மிஞ்சியதை கொட்டுங்கள்
வாங்கிக்கொள்வது சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும் அச்செயலின் பின்னான பாவமுமே முக்கியமென்றாய்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேலுலகின் அதிர்வுகள் உன்னை தீண்டாதபோது
தீண்டத்தகாதவனாய் நெஞ்சில் இருள் மண்டி இருந்ததுண்டு

அதிர்வுகள் துவங்கியதும் பகிர்வுகள் துவங்குவது வழக்கம்தானே
உன் கவிதை வரிகளின் இடைவெளிகளில் ஒலிப்பது ஓங்கார முழக்கம்தானே

உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைக்கும் மண்டூகங்கள் மண் மூடிப்போகும்
கண் மூடி ஆன்மக்கயிறு வீசி !
காளி ஆசி தனை யாசி !
காசியில் குடிபுகுந்தாலும் கருமம் தொலையாத கசடர்க்கும்சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோபீஷ்டம்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

பாவம் இவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் இவர்கள் உன் ஆணைகளை கெஞ்சலாக பார்க்கின்றனர்
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்
மரை கழன்ற மந்தர் தம் செவியில் மறையுணர்ந்த உன் உரை புகுமோ ?
மாவரைக்கும் க்ரைண்டர்களாய்
துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழண்டு கிடக்கின்றார்
ஸ்வர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவியால் காது குடையும்
முடை நாற்றம் பிடித்த இந்த கிடையில் உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத சோ (சொட்டை) தலையர்கள்
அரை ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே இவர்களை பாதிக்கின்றன.
ஊதும் சங்கை ஊதிவை !
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.. பழிக்கும் மந்தர் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

உன்னுள் உறை பரமனுக்கு முகமன் கூறி முத்தமிழ் கடலில் முத்தெடு ..
தமிழன்னை தாள் சேர்த்து கூத்திடு
இதழ்களை பூவாக்கு வலை சேர்த்து வலைப்பூவாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் என்று வைரவரிகள் சொல்லி
தழலை கெல்லியெறிந்து பொருளுக்காய் வாழ்க்கையை தொலைத்து
வீண புத்திரர்களாகிப்போன வாணி புத்திரர்களை மறந்து விடாதே
நெஞ்சக்கழலை துறந்து விடாதே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேகத்துக்கப்பாலிருந்து கொட்டும் வார்த்தைகளை வாங்கிவை
நினைவில் தேங்க வை
பண்ணில் பாட்டில் மானுடம் ஓங்கவை
நீயா எழுதுகிறாய்
பார் முழுக்க பல்லாயிரம் சாதியார்
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
படி எடுக்கும் பணியாள் நீ

ஈங்கிவர் ஆசை தனியார்
பரமனை பணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து
காத்தவன் இழப்பான் இழப்பவன் பெறுவான்
இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனித மனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கை உண்டு
இளமையில் முதுமை
எதிலும் இயலாமை

கருச்சுமக்க ஆள் தேடும் இவரே
கருவாக்கவும் தேடுவரே !
சகதியொத்த சங்கதி பல உண்டு
சக்தி இழந்து இவரே சிவனார் போலாகி
மணவாழ்வை மயானமாக்கிட்டார்

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாக சில வாக்கியம் கூறிவிட்டு
உன் இறை தேடி உன்னுள் இறங்கி விடுவாய்

வாழும் மாந்தரைப்பார் !
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை
முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல்தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேனும் எழுது
சமாகாலர்களின் சமாதிகளின் மீதாவது உன் கவிதைகள்
எச்சரிக்கை விளக்குகளாக ஒளிரட்டும்
நாளைய சமுதாயமேனு செழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

ஆகப்போவதென்ன ஆண்பிள்ளை அழுது புதிதாய்
சாகப்போவதென்ன மனிதமே செத்தபின்பு !