Tuesday, July 14, 2009

விஷயம் தெரியாம இப்படி வாழ்க்கையால வாழப்பட்டுக்கிட்டு

திரிசூலம் படத்துல கே.ஆர்.விஜயா மாதிரி, மனசுல என்னதான் வேதனை இருந்தாலும் வாயெல்லாம் சிரிப்பா வளைய வந்த என் அம்மா யூட்ரஸ் கேன்ஸர் வந்து, அதை அறுத்து எறியர வாய்ப்பு இருந்தும் வயிற்றுக்கும் பரவி ரேடியம் ட்ரீட்மென்டால முடியெல்லாம் கொட்டிப்போய் , போன்சாய்க் வாழைமரம் மாதிரி குறுகி செத்தாளே அப்பவே மரணம் என் சிந்தனைப்போக்கை ஒடைச்சு திருப்பிருச்சு.

நல்ல மாட்டுக்கு நல்ல சூடுமாதிரி என் அப்பா வாழ்ந்த நடுத்தர வர்க ஹிப்பாக்ரட் வாழ்க்கைய நான் வாழக்கூடாதுனு முடிவு செய்து பலகாலம் ஆச்சு. தொடர் மரணங்கள் அதுவும் அந்த மரணங்களுக்கு முன் பின்னான க்ளிப்பிங்குகள் என்ன ரொம்பவே பக்குவப்படுத்திருச்சு. ஓகே.

இருந்தாலும் என் மனதில் ஒரு சின்ன ஆசை மட்டும் துளிர் விட்டுக்கிட்டே இருக்கு. அது என்னன்னா என்னை சுத்தி இருக்கிற மக்கள் (உங்களையும் சேர்த்துதான்) விஷயம் தெரியாம இப்படி வாழ்க்கையால வாழப்பட்டுக்கிட்டு இருக்காங்களோ விச‌யம் என்னன்னு என் ஸ்டைல்ல சொல்லி தீர்த்து வச்சுட்டா திருந்திப்போட்டு யார் வாழ்க்கைய அவங்க வாழ்வாங்களே ங்க ஆதங்கம்தான். கவிதை07 பேர்ல நான் வச்சு கிழிச்சிக்கிட்டு இருக்கிறதெல்லாம் இந்த ஒரே ஒரு அற்ப ஆசைலதான்.

மரணங்கற கத்தி தலைக்கு மேல தொங்கிகிட்டே இருக்கு. இந்த வாழ்க்கைல என்ன வந்தாலும்,எது போனாலும் மிஞ்சப்போறது சில நினைவுகள் தான். அந்த நினைவுகள் தான் நம்மோட அடுத்த பிறவிய நிர்ணயிக்க போறது.

1989 முதல் கிரக‌ங்களோட செயல்பாடுகளை கவனிச்சுக்கிட்டே வரேன். இதுல ஒரு சின்ன சூட்சுமம் இருக்கு. நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல, ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம். அப்போ நமக்குள்ள நான் என்ற அடையாளம் இல்லே. மந்தையா இருந்தோம். மறுபடி மந்தயா மாறத்தான் துடிக்கிறோம்.

ரசிகர் சங்கம்,அரசியல் கட்சியெல்லாம் மந்தையா மாறுவதற்கான முயற்சிதான். நாம இந்த இயற்கைலயிருந்து வந்தோம். இயற்கைக்கு சுய ந‌லம் கிடையாது, இவன் அவன் என்ற வித்யாசம் கிடயாது. கிரகங்கள் எல்லாம் இயற்கையின் படைப்பு. எவனொருவன் சுய நலமில்லாமே ,அவன் இவன் என்ற வித்யாசம் இல்லாமே செயல்படறானோ அவன் மேல கிரகங்கள் வேலை செய்ய‌றதில்ல.

நாம என்னதான் சுய நலத்தோட வாழ்ந்தாலும் நம் உழைப்பின் பலன் பொதுவுலதான் போகுது. ஒரு தலைமுறைல ஒரு அப்பன் ஊரை அடிச்சு உலைல போட்டா அடுத்த அல்லது அதற்கடுத்த தலைமுறைலயாவது ஒருத்தன் பிறந்து வரான் மூதாதைகள் சேர்த்து வச்சதையெல்லாம் அள்ளி விட்டுர்ரான்.அவிங்க செய்த கர்மத்தை எல்லாம் தான் அனுபவிக்கிறான். உ.ம். கலைஞரின் மகன் மு.க.முத்து.


மாத்தி யோசிங்கப்பு !