Friday, February 26, 2010

மறுபடி அவள் : தொடர் கதை

காலியா போன ஆட்டோவை கை தட்டி கூப்டா .சரி ரூமுக்கு தான் போவா போலனு நினைச்சா பஜாருக்கு போக சொன்னா. சனம் ஒரு வாரம் கர்ஃப்யூக்கு அப்புறம் அப்பத்தான் கடைகளை திறந்த மாதிரி அலைபாஞ்சுக்கிட்டிருந்தாக. எவனோ ஊரை ஏமாத்தவே ரிச் ஃபேஷன்ஸுன்னு ஒரு கடை திறந்திருந்தான்.மாயா ஆட்டோவை அந்த கடை வாசல்ல நிறுத்தி மீட்டர் கட் பண்ணி கடை படியேறினாள். ஜீன், டீ ஷர்ட்டுன்னு இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தா. நான் காதோரமா "இதெல்லாம் ஓவராயிருக்கு ..உன் ஸ்ட்ரக்சருக்கு செட்டாவாது கண்ணு ..சித்தூர் சனம் மேல உனக்கென்ன கடுப்பு"ன்னேன் முறைச்சு பார்த்துட்டு இதெல்லாம் உனக்குதான்" என்றாள்.

"அடப்பாவி மகளே! என்னா செலக்ஷனிது? பஞ்சுமிட்டாய் கலர்ல சுப்பர் மேன் பொம்மை, தெலுங்கு தேசம் கலர்ல பூனை பொம்மை.. என்னை என்ன எல்.கே.ஜி பையனு நினைச்சயா? சைஸை பார்ரா ரெண்டு முகேஷ் உள்ளார போறாப்ல.. டீ ஷர்ட்டுன்னா அப்படியே சிக்ஸ் பேக் பாடியையும், கட்ஸையும் காட்டனும்.. கைய மடிச்சு விட்டா அப்படியே கமல் மாதிரி இருக்கனும் ( கதை நடக்கறது 1987லிங்கண்ணா).. என்னை பழி வாங்கனும்னா அதுக்கு இதானா வழி ? இதைவிட ஒரு லாலி பாப் வாங்கி கொடு சப்பிக்கிட்டே வரேன்" என்று புலம்பவே ஆரம்பிச்சுட்டேன்.

" ஜான்தா நை" நீ இதைதான் போட்டுக்கனும். ஆமா இதென்ன தலை குருவிக்கூடு மாதிரி எப்படியும் வெயில் காலம் ஆரம்பிச்சுருச்சு..நல்லா சம்மரா ஹேர் கட் பண்ணிக்க.. புல் தடுக்கிபயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு சிக்ஸ் பேக்காம், கட்ஸாம்" பல் கடிச்சிக்கிட்டே ரகுவரன் ஸ்டைல்ல பேசிட்டு கவுண்டர்ல இருந்தவனை இதெல்லாம் "பேக் பண்ணிருங்க"ன்னிட்டா.

ராகி மால்ட்டு, ஹார்லிக்ஸ்,விவான்னிட்டு மார்க்கெட்ல இருக்கிற சத்து பானமெல்லாம் வாங்கி குவிச்சா. நந்தினில நெய் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சிட்டு அதோட விட்டாளா ?டவுன் இருக்கிறதலயே பயங்கர ஜிகாவா இருக்கிற சலூனுக்கு கூட்டிப்போயி "சார் ! போலீஸ் செலக்சனுக்கு போறாரு ஷார்ட்டா வெட்டிவிடுப்பா"ன்னிட்டா. நான் முறைக்கிறேன் முறைக்கிறேன் கண்டுக்கிட்டா தானே. பாவம் சலூன் காரன் கரண்ட் சார்ஜுக்கு கூட சிரைக்கலியேனு இருந்தானோ இல்லை திருப்பதில ட்ரெயின் ஆனவனோ " நக்கி "எடுத்துட்டான். அழுகை அழுகையா வந்தது.

மறுபடி ஆட்டோ " நேரு ஸ்ட்ரீட் போப்பா" ரூம் கதவு பூட்டை திறக்கறப்பவே முதல்ல குளிச்சுட்டு இந்த புது ட்ரஸ்ஸை போடு.. சூடா ஹார்லிக்ஸ் தரேன். குடி. சரி வராண்டால எதுக்கு வாக்கு வாதம்னிட்டு பேசாம உள்ள நுழைஞ்சேன். மூனு மணி நேரம் சிகரட் இல்லாம லங்க்ஸ் நிக்கோடின் நிக்கோடின்னு அரற்ற ஒன்னை பத்த வச்சேன்.

மாயா நான் சிகரட் பிடிக்கிற ஸ்டைலை ஒரு நிமிசம் பார்த்துட்டு "முகேஷ்! நான் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே"ன்னா. "என்ன"ன்னேன். " என்னதான் தொங்கு மீசை வச்சிருந்தாலும், இந்தியாவுல பரவிக்கிடக்கிற வறுமை மாதிரி கன்னமெல்லாம் தாடி முளைச்சாலும் நீ சிகரட் பிடிக்கிறப்பதான் கொஞ்சமாச்சும் ஆம்பளை மாதிரி தெரியறே"ன்னாள். அதுல வேற மாதிரிங்கற வார்த்தைய மா.....திரின்னு இழுத்தாப்ல உச்சரிச்சாப்பாருங்க நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

'ஏய்! என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல. பஞ்சு மிட்டாய் கலர்ல டீ ஷர்ட் வாங்கறே.. போலீஸ் கட் பண்ண வைக்கிறே ..இப்ப என்னடான்னா சிகரட் பிடிக்கிறப்பதான் ஆம்பள மாதிரி இருக்கேங்கறே.. என் ஆண்மைல உனக்கு சந்தேகம் இருந்தா மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா வேதான்னு யார் கிட்டே வேணம்னா கேட்டுக்க. ஹேர் கட் பண்ணிட்டா குளிச்சித்தான் ஆகனும், ட்ரஸ் மாத்தித்தான் ஆகனும்னு நினைக்கிறே போல. அதெல்லாம் நடக்காது கண்ணு.. காலைல ஹேர் கட் பண்ணிட்டு, அப்படியே டீ அப்படியே டிஃபன், அப்படியே லஞ்ச் அடிச்சு மதியம் 3 மணிக்கு டூர் வண்டிய அனுப்பிட்டு ஒரு பீர் அடிச்சுட்டு படுத்து தூங்கி ராத்திரி 10 மணிக்கு குளிச்ச பார்ட்டி நானு.. எப்டி எப்டி ஆம்பளை மா......திரி யா தேவைதான்"

என் கோபத்தை ஏதோ சுவாரஸ்யமான வீடியோ க்ளிப்பிங்க் பார்த்த தினுசுல பார்த்த மாயா " நான் சொன்னதுல தப்பே இல்லை. நீ இவ்ள அக்ரசிவா பேசறப்ப கூட உன் முகத்துல பால் வடியுதுரா' என்றாள்.

"வேணா மாயா .. நீ ஒரு முகேஷை தான் பார்த்திருக்கே.."
"அட உங்கப்பாவ பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியிருந்தது.. உனக்கு ரெட்டை வேற இருக்கா..கூப்டு கூப்டு"
"என்ன நக்கலா? ஆமா நான் அசல் விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கேன்.. ஆமா நீ எதுக்கு எனக்கு ட்ரச் ப்ரசண்ட் பண்ணனும். ஓகோ அடியாள் மாதிரி உங்க வில்லேஜுக்கு போய் பேக்கு மாதிரி ஒதை வாங்கிகிட்டு வந்ததுக்கு மாமூலா? ஆமா என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல .. நான் ரோட்ல நடந்து வந்தா 40 வயசு ஆன்டி கூட முந்தாணைய சரி பண்ணிக்கும் தெரியுமா உனக்கு?"
மறுபடி மாயா முகத்தில் அதே வீடியோ க்ளிப்பிங் சுவாரஸ்யம்.

"த பாரு ! நீ என்னை என்னவோ செய்யப்பார்க்கிறே...எவளையாவது கணக்கு பண்றப்ப உன்னோட இந்த கமெண்ட் , பார்வையெல்லாம் ஞா வந்துருச்சுன்னா அப்புறம் நான் டாக்டர் மாத்ருபூதத்தை தான் பார்க்க வேண்டிவரும்.. நான் வரேன் தாயி ! அய்யயோ பொம்பளைலயே சேர்த்தியில்ல நீ" ன்னிட்டு எந்திரிச்சு தெருக்கதவு பக்கமா திரும்பினேன்.

ஒரே மூச்சுல என்னை நெருங்கின மாயா என் காதை பிடிச்சி " என்னடா.. நீ ஆம்பள சிங்கமா? உன் மூஞ்சியும் நீயும்.. ஃபீடிங் பாட்டில்தான் தெரியுதுரா உன் மூஞ்சில.. எப்டி எப்டி நான் போய் உன் லவர்ஸ்கிட்டே கேட்கனுமா உன் ஆண்மைய பத்தி அறுத்து எறிஞ்சிருவன். போய் ஒழுங்கா குளிச்சிட்டு நான் வாங்கி கொடுத்த ட்ரஸ்ஸ போட்டுக்கற வழியபாரு"ன்னா..

சாதாரணமா வேற யாராவது ஒரு பொம்பளை ,பொம்பளை என்ன கிழவியாவே இருந்தாலும் இந்த மாதிரி பேசியிருந்தா அப்படியே கமல் சார் மாதிரி இழுத்து ஒரு இங்கிலீஷ் கிஸ் கொடுத்திருப்பேன். அதென்னவோ தெரியல மாயா முகத்துல இருந்த ஒரு வித அலட்சியம், என் மேலான பரிபூரண நம்பிக்கை, தானேதோ இந்த பூமியில பிறந்த எல்லா குழந்தைக்கும் அம்மா மாதிரியான ஃபீலிங்க் அதை என்னன்னு சொல்ல தெரியலை ... என்னை சிலையாக்கிருச்சு, அடுத்த செகண்ட் தலைய உதறிக்கிட்டு சாதாரணமானேன். குளிச்சுட்டு மாயா வாங்கின ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்ஷன்ல நின்னு ' குட்மா ..........ர்னிங்க் டீச்சர்!"ன்னேன்.

மாயா சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு.. அதை சிரிப்புனு சொன்னா எனக்கு மொழியே தெரியாதுனு அர்த்தம். அந்த சிரிப்பு அப்படியே வெடிச்சது. க்ளைமோர் பாம் மாதிரி வெடிச்சது. சிரிச்சா சிரிச்சுக்கிட்டே இருந்தா அவளோட கண்கள்ள் கண்ணீர் மாலை மாலையா கொட்டுது சிரிச்சுக்கிட்டே இருக்கா.சிரிச்சுக்கிட்டே கிச்சனுக்கு போய் ஹார்லிக்ஸ் கலந்துக்கிட்டு வந்து கொடுத்தா.

நான் "மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ' என்றேன்.