Monday, January 4, 2010

குரு பெயர்ச்சி பலன் 2

"வணக்கம் சாமி !"
"வணக்கம் ! இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததே இல்லயே .. என்ன விஷயம்?"
"கொஞ்சம் ஜோசியம் பார்த்துக்கனும் சாமி !"
"உங்களுக்கு நான் ஜோசியம் சொல்றேனு யார் சொன்னாங்க?"
"இது இன்னா சாமி ..வெளிய போர்ட பார்த்தேன் ..உள்ளார வந்தேன்"
"அப்படியெல்லாம் சொல்றதில்லிங்க. போர்டு வச்சிருக்கிறது ..ஏற்கெனவே என் கிட்டே பார்த்துக்கிட்டு சேட்டிஸ்ஃபை ஆகி வேற யாரையாவது அனுப்பினா அவிகளுக்கு வழி தெரியத்தான். ரோட்ல போறவங்களையெல்லாம் கூப்பிட இல்லே"
"சாமி ! தப்பா நினைச்சுக்காதிங்க.. க்ரானைட்ஸ் ராஜசேகர் தான் அனுப்பிச்சாரு..அவரும் இதைதான் சொன்னார். போர்ட பார்த்து வர்ர ஆளுக்கெல்லாம் அவரு சொல்லமாட்டாரு. முதல்ல என் பேரை சொல்லுன்னாரு"
"சொல்லியிருக்கலாமே"
"அப்டியில்லே சாமி ! பார்ப்பாரவுகளும் ஜோசியம் சொல்றாங்க ..யார் போனாலும் பத்தோ இருபதோ வாங்கிகிட்டு ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி அனுப்பறாங்களே.. இந்தாளூ மட்டும் என்ன ஆகாசத்துல இருந்து குதிச்சாரா.. இவருக்கு பணம் வேணாமா பார்த்துர வேண்டியதுன்னுதான் சொல்லலே"
" நானேதும் ராமகிருஷ்ண பரமஹம்சருமில்லே நீங்க ஏதும் விவேகானந்தருமில்லே. நம்பி , நம்பிக்கையா வரவங்களுக்கு மட்டும் தான் நான் சொல்றது"

"இது இன்னா சாமி வித்யாசமா கீது "
"வித்யாசம்தான். அப்படி நம்பி வந்தவுங்களுக்கு சொல்லவே எனக்கு நேரமில்லே. நோட்டம் பார்க்க வந்தவுகளூக்கு டைம் பாஸ் வரவுகளுக்கெல்லாம் சொல்ல நான் தயாரில்லை"
"மன்னிக்கனும் சாமி ..தப்பாயிருச்சு"
"பரவால்ல பரவால்ல  விஷயத்துக்கு வாங்க.. ஜாதகம் இருக்கா டேட் ஆஃப் பர்த்தா "
"ரெண்டுமே கிடயாது சாமி"
"என்னப்பா மொதல்ல இருந்து எல்லாமே வில்லங்கமா இருக்கு ..உன் பேர்ல முதலெழுத்து ப,பி,பே,போவா என்ன?"
"அட ஆமா சாமி ! எப்படி சொல்ட்டிங்க கரீக்டா"
" நான் எங்கே சொன்னேன். நீதான் சொல்லாமயே சொல்லிட்டே ! இப்ப என்ன ராசி பலன் சொல்லனுமா ? .. நேரம்யா.. இரு இரு ராஜசேகருக்கு வச்சிருக்கேன். இத பார் ! ராசிபலனெல்லாம் நான் சொல்றதே கிடையாது. சொன்னாலும் காசு வாங்கறது கிடையாது முதல் பாயிண்ட் உன் பேர் ஜாதகப்படி வைக்கப்பட்டிருந்தா நான் சொல்ற பலன்  15 சதவீதம். வொர்க் அவுட் ஆகும். உனக்கு 30 வய்சு முடிஞ்சிருந்தா  10 சதவீதம், ரெண்டுமில்லாம உன் பேருக்கு வர்ர ராசில சூரியன் இருக்கும்போது பிறந்திருந்தேனு வை ஒரு 5 சதவீதம் ஒர்க் அவுட் ஆகும். சம்மதமா?"
" இன்னம் நான் என்ன சொல்றது சாமி ! சொல்லுங்க கேட்டுக்கறேன் "


"சாமி ! ஏதோ குரு மாறிட்டாருனு பேசிக்கிறாங்க. என் சம்சாரத்துக்கு சிம்ம ராசி. "
"சிம்ம ராசிக்கு குரு 5,8 க்கு அதிபதி இவர் பாஸ்ட்ல 6 ல இருந்தாரு.
இதனால அவிங்களுக்கு சத்ரு ஜயம், ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, வியவகார ஜெயம்லாம் ஏற்பட்டிருக்கும். அதே சமயத்துல வாரிசு தொடர்பான கஷ்ட நஷ்டங்களும் ஏற்பட்டிருக்கலாம். காரணமில்லாத மனோ துக்கம் ஏற்பட்டிருக்கும். பூர்வ ஜென்ம பகைவன் கூட இந்த நேரத்துல எதிர்ப்பட்டு நிம்மதிக்கு  ஆப்பு வச்சிருப்பான்.
இப்போ அவரு 7 க்கு வந்திருக்காரு. அதனால  கணவருக்கு (அதாவது  உனக்கு)  கண்டம், நோய், பிரச்சினைன்னு ஏற்பட்டாலும் தம்பதிகளிடையில் ஒற்றுமை, ஒருத்தரால இன்னொருத்தருக்கு லாபம் ஏற்படும். பேச்சிலர்ஸுக்கு திருமண ஏற்பாடு நடக்கும். கூட்டு வியாபாரம் அமையலாம். "

"சாமி என்னுது கன்னியா ராசி"

"கன்னிக்கு குரு 4,7 க்கு அதிபதி. பாஸ்ட்ல இவரு 5 ல இருந்திருப்பாரு. தாய்,தாய் வழி உறவு, தாய் வழி சொத்து, வீடு,வாகனம்,கல்வி  ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறால நல்ல கோ ஆப்பரேஷன் இருந்திருக்கும். பொன் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருந்தது. இப்போ அதே குரு 6 க்கு வராரு. அதனால மேற்சொன்ன வகையறாலயே லாபம் குறைஞ்சு   நஷ்டம் மனசு கஷ்டம் ஆரம்பமாயிரும். கடன், விரோதம், நோய் தொல்லை தரும். தங்க நகை அடகுக்கு போகும்.. சனி வேற லக்னத்துல இருக்காரு. பெண்டாட்டி விஷயத்துல விட்டு கொடுத்து நீக்கு போக்கா நடந்துக்கனும். இல்லாட்டி மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டு க்யாரண்டி. கால்,ஆசனம்  தொடர்பான தொல்லையும் ஏற்படலாம் "

" நிலைமை பார்த்தா அப்படித்தான் இருக்குது சாமி. என் பெரிய பையனோடது துலா ராசி."

" விட்டா 12 ராசிக்கும் பலன் கேட்டுருவ போலிருக்கே "
"ஹி ஹி.. நம்ம வீட்ல முதல் 4 ராசில யாரும் இல்லே சாமி. 8 ராசி தான். அதுலயும் ரெண்டை முடிச்சுட்டிங்களே மிச்சம் இருக்கிறது 6 தான்"

" சரி சரி. துலா ராசி கதைய பார்ப்போம்.இவிகளுக்கு குரு  3,6 க்கு அதிபதி  பாஸ்ட்ல 4 ல இருந்து இப்போ 5க்கு வந்திருக்காரு. கடந்த காலத்துல வீடு மாத்த வேண்டி வர்ரது, அம்மாவுக்கு நோய் பிரச்சினை அ அவிகளோட விரோதம், வாகனத்தால செலவு இத்யாதி இருந்திருக்கும். அவர் 5க்கு வர்ரது ஒன்னும் பெரிசா நல்லதை செய்யாட்டாலும் பிரச்சினைகள் மனசளவுலதான் எஃபெக்ட் கொடுக்கும். உ.ம் அண்ணன்/தம்பி/அக்கா/அம்மா  நம்மளை என்னமா போட்டு தாக்கினாங்க .இப்ப கஷ்டத்துல இருக்காங்களாமே நாம எதுனா உதவி பண்ணனுமோ . பண்ணா மறுபடி ஒட்டிக்கிட்டா ? பண்ணலன்னா நாலு பேர் என்ன பேசுவாங்க . சிலர் தொலை தூர கல்வி பயிலலாம். சிலருக்கு குறைஞ்ச வாடகைல/விலைல  வீடு/வாகனம் அமையலாம். ஏழரை சனி ஆரம்பிச்சுருக்கு . கொஞ்சம் பார்த்து நடந்துக்கிடனும். 4,5 க்கு அதிபதியான சனி 12 க்கு வரதால புத்திகுழப்பத்தால, வீட்டுல பிரச்சினை பண்ணுவான்.

"கரீக்டா சொல்ட்ட சாமி. அப்படியே நம்ம சின்ன பையனுது விருச்சிக ராசி"

"யோவ் நம்ம பையன்னு சொல்லாதயா .என் பையனு சொல்லிக்கோ. விருச்சிக ராசிக்கு குரு 2,5 க்கு அதிபதி.பாஸ்ட்ல 3 ல இருந்தாரு. அப்போ பண விஸயத்துல அட்வென்சர் எல்லாம் பண்ணியிருப்பான். இஷ்டத்துக்கு பேச்சை விட்டிருப்பான். இவனால குடும்பத்துல கூட பிரச்சினைகள் வந்திருக்கும் . சாகசமான வேலையெல்லாம் கூட செய்து மொக்கையாகியிருப்பான். இதனால கொஞ்சம் கெட்ட பேர் கூட வாங்கியிருப்பான். சவுண்ட் பாக்ஸு ட்ரபுள் கொடுத்திருக்கலாம். இப்போ நாலுக்கு வரதால  ஓரளவுக்கு பொறுப்பா பேசுவான். கு.ப அம்மாவோடயாவது அட்டாச் மென்டோட இருப்பான். ப்டிப்பு மேல கவனம் போகும். ஆனால் திடீர்னு பாய பிறாண்ட ஆரம்பிச்சு ஒரு 3 நாள் வீட்டை விட்டு தொலவா கூட இருப்பான். என்ன ஒரு ரிலீஃப்னா சனி 11 ல இருக்காரு ஸோ (3,4 க்கு அதிபதி) இவன் பண்ற லொள்ளு கூட நல்லதாவே முடியும்."

"சாமி ச்சும்மா சொல்றேனு நினைக்காதிங்க நீங்க சொன்னதுல நூத்துக்க் 60 பைசா பாஸு"

'இந்த நக்கல் தானே வேணாங்கறது.வெறுமனே ராசிபலன் தான் மக்கள் வாழ்க்கைய பாதிக்கும்னா மக்களை  12  க்ரூப்பா பிரிச்சுரலாம். சனத்த்டோட  வாழ்க்கைய பார்க்கிறேல்ல. 12 விதமாத்தானா இருக்கு ? ஜாதகத்த வச்சு பார்த்தாலே ரெண்டு மணி (சுமார் ) நேரத்துக்கு ஒரே லக்னம் ஒரே ஜாதகம் . நிமிசத்துக்கு இந்தியால 4 குழந்தை பிறக்குது. அப்போ 120 நிமிசத்துக்கு ( 2 மணி நேரத்துக்கு) 480 குழந்தை பிறக்குது. ஒரே ஜாதகம். ஒரே லக்னம். ஆனால் ஒரு கன்னடகாரன் தான் சூப்பர் ஸ்டார் ஆகறான். ஆகி தொலைக்கட்டும் . அதில்ல பிரச்சினை. கர்னாடகா போனா நான் ராஜ்குமார் ரசிகன்னுவான். ஆந்திராவுக்கு வந்தா என்.டி.ஆர் ஏ.என்.ஆர் ரசிகன்னுவான், தமிழ் நாட்டுக்கு வந்தா எம்.ஜி.ஆர், சிவாஜிம்பான். அதே ஜாதகத்துல பிறந்த மிச்சம் 479 குழந்தை என்னய்யா ஆச்சு ?"

"என்ன ஆச்சு?"

" நோகாம கேள்வி கேட்கிறே பாரு. இதுக்கு ஓம்கார் ஸ்வாமினு ஒரு சோசிய மேதை இருக்காரு அவரு பதில் சொல்றாரா பார்த்துட்ட்டு சொல்றேன். அடுத்து என்ன உன் பெரிய பொண்ணுது தனுசு, சின்ன பொன்னுது மகரம், பெரிய மச்சினி கும்பம், சின்ன மச்சினி மீனம் அப்படிதானே"

" ஜாமி ! கரீக்டா சொல்ட்டே சாமி. மை போட்டு பார்த்தியா ? "

"யோவ் நான் என்ன என்.டி. திவாரியா உத்தராஞ்சல் குட்டிகளுக்கு மை போட்டு பார்க்க  நீ நாளைக்கு வா மத்த ராசிகளுக்கும் சொல்லிர்ரேன்"

"செரி சாமி "
"என்னத்த செரிக்க சொல்றே . நானு இன்னம் சாப்டவே இல்லய்யா"
"ஜாமி ரொம்ப தமாசா பேசிறிக "