Wednesday, November 10, 2010

மம்மி ! ஐ லவ் யு - 2

வால்மீகி ராமாயணம் எழுதிக்கிட்டிருக்காரு. அப்போ  ஒரு காண்டத்துக்கு ஆஞ்சனேயர் பேரை வைக்கனும்னு ஒரு தாட் வந்தது. நேர அவர்கிட்டே போய் மேட்டரை சொன்னாரு. ஆஞ்சனேயர் பில் குல் ஒத்துக்கல. (தன்னடக்கத்தின் மறு உருவமில்லையா?).

வால்மீகிக்கு படா  பேஜாரா போச்சு. சரிப்பா "சுந்தர காண்டம்னே வச்சுக்கறேன்"னுட்டு கழண்டுக்கினாரு.

இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு அனுமாரு அம்மாவை பார்க்க போயஸ் கார்டனுக்கு சாரி.. வீட்டுக்கு போனாரு. அஞ்சனாதேவி - அம்மா - "சுந்தரா! வந்தியா.. என்னப்பா..களைச்சுபோயிருக்கே.. இந்த பாலையாச்சும் குடின்"னாய்ங்க. ஆஞ்சனேயருக்கு கண்ணை கட்டுது..

சுந்தரான்னா "அழகா"ன்னு அர்த்தம் .அஞ்சனாதேவியோட கண்ணுக்கு அனுமார் கூட அழகுதான்.

இதே போல ஒரு மகனோட கண்ணுக்கு தாய் அழகுதான். அவள் பரட்டைதலையோட இருந்தாலும் சரி, சொறி சிரங்கோட இருந்தாலும் சரி.

என் அம்மா. மாநிறம்தான். ஆனால்  நல்ல களையான முகம்.  இதுக்கு எதுக்காகவும் மூக்கை சிந்தினதில்லைங்கறது தான் காரணம்னு நினைக்கிறேன்.  குடம் குடமா கண்ணீர் வடிப்பதற்கான அவகாசம் நிறைந்த லைஃப் தான். ஆனால் கலங்கினதில்லை.

பிறந்த வீட்லயே நிறைய கஷ்டப்பட்டு இதயமே காச்சுப்போயிருக்கும்னு நினைப்பிக. அதான் இல்லை.

அந்த காலத்திலேயே எஸ்.எஸ்.சி படிச்சு டீச்சராகவும் வேலைப் பார்த்திருக்காய்ங்க. மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.

அவிக பேக் கிரவுண்டே வேற . வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.எம் தேவராஜ் கூட தூரத்து சொந்தம்னு கேள்வி. அண்ணன் மிலிட்டரி. அக்கா ரயில்வே ஊழியர் மனைவி. ஒரு தங்கை திருப்பதியில் வாழ்க்கைப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவள்.

இந்த பேக்கிரவுண்டோட ஒப்பிட்டா எங்கப்பன், எங்கப்பன் சைடு சொந்தம்லாம் பிக்காலிங்க. என் அப்பாவைப் பெற்ற‌ தாத்தா எல்லா வியாபார‌ங்க‌ளையும் 6 மாத‌ங்க‌ளுக்கு அதிக‌மில்லாம‌ல் செய்துப் பார்த்து விட்ட‌ பார்ட்டி.

எங்க  பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை ப‌டிக்க‌ வைத்தாளாம். ம‌ணிய‌க்கார‌ரின் ம‌க‌ள்,இட்டிலி க‌டைக் காரியின் ம‌க‌ளை ம‌ண‌ந்த‌து எப்ப‌டி என்று நாளிது வ‌ரை யோசிக்கிறேன். ஏதும் ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது. இத்தனைக்கும் காதல் கீதல்லாம் கிடையாது.

அந்த காலத்துல கவர்மென்டு உத்யோகத்துக்கு அம்மாத்தம் மதிப்பு போல. அல்லது பெண்ணை பெத்தவுக சொத்து,பணம்,சம்பளம் இத்யாதியெல்லாம் பார்க்காம ஸ்பார்க் இருக்கா,பையன் துடியா இருக்கானா முன்னுக்கு வருவானா கட்டிவை பொண்ணைனு ரோசிச்சிருக்கனும். கண்ணாலத்தின் போது எங்கப்பாவோட போஸ்ட் என்னங்கறிங்க. அட்..டெ...ண்டர்.

எங்கம்மா கொண்டு வந்த சீர் வரிசைகளோட பிரம்மாண்டத்தை சொல்லனும்னா தத்தாரியா திரிஞ்ச காலத்துல அவிக பீரோல அடுக்கி வச்சிருந்த வெள்ளி தம்ளர்களை ஒவ்வொன்னா வித்தே என் தனிப்பட்ட செலவுகளை சமாளிச்சிருக்கேன். ( 1984 டு 1986)

1986 ல பிரம்மச்சரியத்துல குதிச்சப்ப மதிய நேரத்து மயக்கங்களை சமாளிக்க பரண்ல இருந்த அத்தனை பித்தளை ,செம்பு பாத்திரங்களையும் துலக்க ஆரம்பிச்சவன் மொத்தத்தையும்  துலக்கி முடிக்க  6 மாசமாச்சு.

இந்த ரேஞ்சு ஃபேமிலிலருந்து வந்த பொம்பளை என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான‌ மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள்.
பக்கத்து மைதானத்துல நடைபாதை வேர்கடலை வியாபாரிகள் குடிசைகள் போட்டு குடியேற எலிகள் (ஒவ்வொன்னும் நமீதா சைஸு) சுரங்கம்லாம் வெட்டிவச்சது உண்டு. ஓட்டு வீடுதான். ஃப்ளோரிங் எந்த அழகுல இருக்கும்னா ஒரு தம்ளரை கூட அசால்ட்டா நிக்கவைக்க முடியாது.

மைத்துன‌ர்க‌ள்,நாத்த‌னார் க‌ல்யாண‌ங்க‌ளுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட‌ போதெல்லாம் ஒரு பேச்சு கூட‌ த‌டை சொன்ன‌தில்லை. மைத்துன‌ர்க‌ள் த‌னிக்குடித்த‌ன‌ம் போனார்க‌ளே த‌விர‌ என் அம்மா என்ன‌வோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.

என் அப்பாவின் பெரிய‌ப்பா ம‌க‌ன் வ‌ந்தாலும் எங்க‌ள் வீட்டில் தான் த‌ங்க‌ல். ஆர‌ணி நில‌ த‌க‌ராறு விஷ‌ய‌மாக‌ ஆண்டு க‌ண‌க்கில் லாட்ஜு வைத்திய‌ர் போல் வ‌ந்து போய் கொண்டிருந்தார். க‌டைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் ப‌ங்கு வ‌ந்த‌ போது அதை கூட  த‌ன் த‌ங்கைக்குத் தான் தாரை வார்த்தார். அம்மா மட்டும் மூச்.

என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத‌ த‌ன‌ய‌ன். என் பாட்டி ச‌ரியான‌ அர‌சிய‌ல் வாதி. இன்னும் கேட்க‌ வேண்டுமா? கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில வையின்னு ஒரே கூத்துதான்.

வாட‌கை வீடு சொந்த‌ வீடாறதுக்குள்ள மெனோஃபஸே வந்துருச்சு. அதுக்கும் காரணம் எங்கப்பன் வெளியூர்ல வெட்டி முறிச்சிக்கிட்டிருந்ததுதான். நாங்க குடியிருந்த வீட்டை ஓனர் விக்கப்போறதா சொன்னான்.

மேட்டர் அப்பாவுக்கு கன்வே ஆக அந்த ஆளு சிம்பிளா "காலி பண்ணிருங்க"ன்னு இண்லன்ட் லெட்டர் எழுதிட்டான்.

நண்டும்,சிண்டுமா, நாலு பசங்க,எட்டு வண்டி சாமான் செட்டு,ஒரு மாமியார்கிழவியை வச்சுக்கிட்டு எப்படி சட்டியை தூக்கிக்கிட்டு அலையறதுன்னு
அப்பாவின் நண்பர்கள்தான்  ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்த வீட்டை எங்கம்மா பேருக்கு பதிவு பண்ணிவச்சாய்ங்க. இதுக்கும் ஊர்லருந்து வந்ததும் நண்பர்கள் மேல எகிறி லந்து பண்ணிய கேரக்டர் எங்கப்பனோடது.

தாளி அந்த வீட்டை பத்தி சொல்லனும்னா தனிப்பதிவே போடனும். ஓட்டு வீடு, உத்தரமெல்லாம் செதிலடிச்சு, மண்ணும்,செதிலும் கொட்டிக்கிட்டு, ஓட்டுசந்துலருந்து அப்ப்போ தேள்,பூரானெல்லாம் கொட்டிக்கிட்டு கிடக்கும்.

ஒரு தாட்டி லேசான ம‌ழையில் இடிந்து வீழ்ந்த‌து. ஒரு மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியின் வீடு ம‌ழைக்கு இடிந்து வீழ்ந்த‌து இந்திய‌ ச‌ரித்திர‌த்திலேயே முத‌லும் க‌டைசியும் இதுவாக‌த்தானிருக்க‌ வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்ப‌டிப் ப‌ட்ட‌து.

இடிந்த‌ வீட்டுக்கு கோழிப் ப‌ண்ணைக்கு கூட‌ போட‌ த‌ய‌ங்கும் லைட் ரூஃப் போட்டு சாத‌னை ப‌டைத்தார் என் த‌ந்தை. சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து வீடு க‌ட்ட‌ ஆர‌ம்பித்தார். அது ஒரு கூத்து. சுவ‌ரை(ம‌ண்) இடிக்க‌க் கூடாது,ப்ளான் மாத்த‌க்கூடாது என்று ஆயிர‌த்தெட்டு நிப‌ந்த‌னைக‌ள். சிமெண்டு த்ராய்க‌ள் போட்டு,அத‌ன் மேல் சிமெண்டு ப‌ல‌கைக‌ள் போட்டு க‌ட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட‌ கின்ன‌ஸ் சாத‌னையும் என் அப்பாவுக்கே சொந்த‌மான‌து. ஏ.சி நாயக்கர் மொசைக் உபயம் செய்ய, தாசில்தார் ஓஞ்சு போவட்டும்னு சிமெண்ட் கோட்டா ரிலீஸ் செய்ய, இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. 

அப்பாவுக்கு 53 வயசு. ரெண்டுவருசத்துல ரிட்டையர்மென்ட். இந்த பீரியட்ல எப்படியோ கொஞ்சம் போல மேல் மாடி (மூளை)  வேலை செய்து  அம்மாவோட எல்.டி.சில சின்னதா ஒரு டூர் போய் வந்தாப்ல.

திஷ்டி ஆயிப்போயி அப்பனை ஹைதராபாதுக்கு தூக்கி போட்டுட்டாய்ங்க. மாசாமாசம் ஊருக்கு வரச்ச அங்கனருந்து காட்டன் புடவை, கேன் சேர், டின்னர் செட்டுனு வாங்கிட்டு வருவாப்டி.  ( எல்லாமே பிளாட்ஃபார ஐட்டம்தான்)

இதற்கிடையில  என் அம்மாவின் மார்பில் க‌ட்டி கிள‌ம்பி, நான் அது கேன்ஸ‌ராக‌ இருக்க‌லாம் என்று கூறி  நான்  வில்ல‌னான‌தும், அவளது க‌ருப்பையிலான‌ கேன்ஸ‌ர்,வ‌யிற்றுக்கு ப‌ர‌வி ப‌ரிதாப‌மாக‌ செத்த‌தும் த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ங்க‌ள்.

ஆள் போனாலும்  என் அம்மாவுக்கும் எனக்கும் இருந்த கம்யூனிகேஷன் மட்டும் சாகாம சிரஞ்சீவியா கிடக்கு. மாடியில துணி காயப்போட்டுக்கிட்டே என் கவிதையை கேட்டு கருத்து சொன்னது, பலான புஸ்தவத்துல  நான் அண்டர்லைன் பண்ணி வச்ச லைன்ஸை படிச்சுட்டு "என்னடா கருமம் ..இது"ன்னு தலையில அடிச்சிக்கிட்டது.

முந்தானை முடிச்சு சினிமாவுல "கண்ணை தொறக்கனும் சாமீ' பாட்டுக்கு அப்பாறம் பாக்யராஜ் ஏன் தலைக்கு குளிக்கிறாருனு சந்தேகம் கேட்டது. நான் அந்த நாள்ளயே மாத்ருபூதம் ரேஞ்சுல விளக்கம் சொன்னதுல்லாம் இன்னம் ஞா இருக்கு.

நம்முது கடகராசியாச்சா (ரெண்டே கால் நாளைக்கொருதரம் மைண்ட் செட்டே மாறிரும்) ஒரு மூட் இருந்தா வீட்டு பின்னாடி இருக்கிற தோட்டத்து மல்லிப்பூ கொடி,நுரை பீர்க்கன்,கனகாம்பரம் இத்யாதி இத்யாதி செடிகளுக்கெல்லாம் ட்ரிம்மிங் பண்ணி , சமையல் பாத்திரம்லாம் கழுவி , சமையல் மேடை,அலமாரி,கேஸ் ஸ்டவ்,சமையலறை எல்லாத்தையும் புரட்டுப்போட்டு ,துடைச்சு ,ஸ்டீல் குடம்லாம் விம் பவுடர் போட்டு கழுவி,துணி போட்டு பள பளக்க  வைப்பேன்.

மூட் இல்லைன்னா " டே முருகா.. முருகம்மா ..வெள்ளை .. வெள்ளையம்மா ! அந்த டம்ளரை எடுத்துக்கொடுத்துட்டு போடி"ன்னா சவுண்ட் பாக்ஸ் ஒயரை பிடுங்கிட்டு போயிட்டே இருப்பேன்.

இதென்ன முருகம்மா?

நான் வயித்துல இருந்தப்ப மொதல் 3ம் கடா குட்டியா போச்சே அட்லீஸ்ட் இதுவாச்சும் பெட்டையா பிறக்காதானு ஒரு ஜொள்ளு,பிறந்துட்டா என்னபண்றதுனு ஒரு பதைப்பு, கலர் கிலர் குறைஞ்சுட்டா நாஸ்தியாச்சேன்னு குங்குமப்பூ, காஷ்மீர் ஆப்பீளனு என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணியிருக்காய்ங்க.

அப்பாவோட கால்ஷீட் கிடைக்காம குல தெய்வத்துக்கு முடியிறக்கனு முடிய வளரவிட்டு கொண்டையெல்லாம் போட்டு அழகுப்படுத்தியிருக்காய்ங்க. அதனாலதான் முருகம்மா.

அதுசரி.. அதென்ன வெள்ளையம்மா?

அம்மா சாப்பிட்ட காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ உபயத்துல அப்படி ஒரு கலர்ல பிறந்துட்டனில்லை. அதான் இந்த டைட்டில்.

அம்மா ஆரம்பத்துல பசி ஷோபா மாதிரி இருந்தாலும் போக போக பண்டரிபாய், புஷ்பலதா மாதிரி அக்மார்க் அம்மா ஃபிசிக்கு வந்துருச்சு.  ஏதாச்சும் ஃபங்க்சனுக்கு கிளம்பறச்ச " தா.. செத்த இரு" ன்னுட்டு அம்மா முன்னாடி முழங்காலிட்டு  புடவை கொசுவத்தை  நீவி விட்ட சந்தர்ப்பங்களை இப்ப நினைச்சாலும்  இயற்கையின் பிரதியா  - இயற்கையின் நிதியா - இயற்கையின் பிரதி நிதியா இருக்கிற பெண்ணின் பால், இயற்கையின் பால் நன்றி உணர்வு பொங்குது.

ஓகே ஓகே.. உணர்வு வழி பகிரல் போதும். சைன்டிஃபிக் அனலைஸ் ப்ளீஸ்னு நீங்க கேட்பிக. அதையும் பார்த்துருவம்.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, சொர்கம் தாயின் காலடியில் - அம்மாவை பத்தி இத்தனை பொன்மொழிகள் உதிக்க காரணம் நாம ஒரு காலத்துல தாய்வழி சமுதாயத்துல வாழ்ந்திருக்கனும். ( அதாவது இன்னைக்கு அப்பாக்கள் பண்ற வேலையையெல்லாம் அம்மாக்கள் செய்திருக்கனும். உ.ம்: வேட்டையாடுதல் - ஐ மீன் பொருளீட்டுதல் .)

எம்.ஜி.ஆர் தாய்க்கு தலைவணங்கு,தாய் சொல்லை தட்டாதேனு புலம்ப காரணம் அவர் வளர்ந்தது கேரளத்துல. அங்கன ஆண்கள் எல்லாம் - அப்பாக்கள் - பொருள் தேட பக்கத்து மானிலம் முதல் வெளி நாடு வரை போறது சாஸ்தி. இதனால குடும்பத்துல மதுரை ஆட்சி கொடிகட்டும் போல.

இன்னைக்கு ஆல் ஓவர் இந்தியாவுல காசு பொறுக்க வெளி நாட்டுக்கு போற ஆண்கள் அதிகமாயிட்டாய்ங்க. இங்கன உள்ள அந்த குடும்பங்கள்ள  மதுரை ஆட்சி கொடி கட்டி பறக்குது. இதனோட விளைவு என்னன்னா ..

தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வளர்ர ஆண் குழந்தைகள் முக்கியமா அப்பங்காரனின் தர்கமற்ற,பொருளற்ற, பொறுப்பற்ற அமெரிக்காதனமான வீட்டோ பவரை பற்றி அறியாது தாயின் "வானளாவிய அதிகாரத்துக்கு" தலைவணங்கி வளரும் ஆண் குழந்தைகளின் பெண் குறித்த பார்வை சற்று மாறுபட வாய்ப்பிருக்குங்கண்ணா..

ஆனால் 43 வருசத்துக்கு முந்தியே அப்பங்காரன் மாவட்டம் மாவட்டமா பந்தாடப்பட  தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல   வாழக்கூடிய ஒரு கொடுப்பினை  நமக்கு அமைஞ்சதுங்கண்ணா.. பெண் குறித்த உணர்ச்சி வசப்படாத அறிவுப்பூர்வமான என்  பார்வைக்கு இதுவும் ஒரு காரணம்னு நான் நம்பறேன்.

 உடலளவுலயோ , மன அளவுலயோ  தாயை விட்டு விலகி, அப்பனோட கமாண்ட்ல வாழற ஆண்குழந்தைகளின் மனம் தாயை தெரு முனை பிள்ளையார் மாதிரி ஆக்கிரும்போல. அவளை ஒரு சூப்பர்ஸ்டிஷியஸ் மித் ஆக்கிரும்போல.  இவன் என்னவோ அப்பனை இம்மிட்டேட் பண்ண ஆரம்பிச்சுருவான். தன் மனைவி தன்னோட தாயின் ரோலை ப்ளே பண்ணனும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவான்.

இந்த உணர்வுகள் இதர பெண்கள் விஷயத்தில் வரும்போது  ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டியாக , உறித்து பார்க்கும் மனோபாவமாக மாறும்போல.

என்ன பாஸ்.. பதிவின் இந்த பகுதி  ரெம்ப ..ஹார்டாயிட்டாப்ல இருக்கா.. மனசை லேசாக்கிக்க அம்மாவுக்கு முட்டி வலி இருந்தா ஐயோடெக்ஸ் தேச்சு விடுங்க. பாதத்துல சேத்துப்புண் இருந்தா கடுக்காய் உரசிபோடுங்க.. அட அவிக மனசு குளுர்ராப்ல எதாச்சும் செய்ங்க தலை..

ஒரு வேளை அவிக உசுரோட இல்லையா .. அந்த உறவுல ஆரிருந்தாலும் சரி,அதுவும் இல்லியா அந்த வயசுல ஒரு பெண் போதும் அவிகளை போய் பாருங்க அவிக வழியா உங்க தாய்க்கு நன்றி சொல்லுங்க.

எச்சரிக்கை:
மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக காரணம் என்ன தெரியுமா? நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம்.