Friday, March 14, 2008

சர்ப்ப தோஷம் ஒரு விஞ்ஞான கண்ணோட்டம்

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.

தர்கரீதியில்,விஞ்ஞான கண்ணோட்டத்துடன் யோசிக்கும் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற வகையில் இன்று சர்ப்பதோஷம் குறித்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.


ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன்.
அந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை கூறுகிறேன்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:


பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

தொடரும்