Friday, September 18, 2009

பிசாசாகவே வாழ்ந்தவன்.


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்!

இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமய அனுபவங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்.நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு.
அதற்கு முன்பு இருந்த கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன்.

நடந்ததை கூறினால் உங்களால் நம்ப கூட முடியாது. அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,விளம்பர பணத்தை லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.


ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து ஆச்சாரி,ஆச்சாரிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். ஆச்சாரி ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ ஆச்சாரி நான் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் ஆச்சாரிக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் (இன்னாள் முதல்வர்)ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

அவுசாரி என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.


"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன்..சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். த‌ற்ச‌ம‌ய‌ம் காங்கிர‌ஸ் எம்.எல்.ஏ வாக‌வும் இருக்கிறார். என‌வே அவ‌ர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார் எங்க‌ள் மேனேஜ‌ர். நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம்.கட்டமஞ்சி ,குழந்தேஸ்வரர் கோவிலை அடுத்துள்ளது சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாழ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 54 வயது.. அப்போ 50 ஆ) .
தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது செல்லப்பெயரை குறிப்பிட்டு "அவர் தானே" என்றார்.


அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் செல்லப்பெயர் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் தேவைன்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?"
"ஹெட் கான்ஸ்டபிள் சார்"
உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார். " உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் ஆச்சாரி திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆச்சாரி திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

பி.கு: இந்த மாதிரி ஃப்ளாஷ் பேக் சீனுங்க ஆயிரம் இருக்குங்கணா.. சத்தியம் எரிக்கும்னு சொல்ல‌