Saturday, June 28, 2008

கஜூரஹோ கண்டு வந்தோம்




சித்தூரில் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு போபால் சேர்ந்தோம்.ரயில் நிலயத்திலேயே சுத்தமான குளியல் அறைகள் உள்ளன. அங்கேயே குளித்து லக்கேஜ் ரூமில் எங்களுடைய பெட்டிகளை வைத்துவிட்டு (கட்டாயம் பூட்டு நம்மிடம் இருக்க வேண்டும் பூட்டியிருந்தால்தான் அனுமதி) ரசீது பெற்றுக் கொண்டு ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள தமிழ் ஓட்டலில் குளித்து டிபன் சாப்பிட்டோம். சாஞ்சிக்கு செல்ல‌ ஆட்டோ பற்றி ஓட்டல் காரர்களையே விசாரித்தோம். அவர்களே ஒரு ஆட்டோ பேசி தர புறப்பட்டோம்.(100 கி.மீ, போய்வர ரூ 400) வழியில் தேனீர்,சமோசா,ஜிலேபி வேகவைத்த முட்டை..எதுவுமே ரூ.3 க்கு அதிகமில்லை. இங்கு இரவு இட்லி கடைகள் போலே அங்கு முட்டை கடைகள். வேகவைத்த முட்டை ரூ.3, பிரட் ஆம்லெட் ரூ.10 .பஜ்ஜி,போண்டா வடைக்கு பதில் சமோசா,ஜிலேபி.

சாஞ்சியில் அசோகர் ஸ்தூபங்கள் மற்றும் மியூசியத்தில் அசோகர் காலத்து 3 சிங்கங்கள் கொண்ட அசோகர் ஸ்தூபங்கள் & போர் கருவிகள் ,பொருட்கள்,சிலைகளை பார்க்கலாம். அங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் அதிகமானவர்கள் ஜப்பானியர்கள் & இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

அசோகர் ஸ்தூபம் எல்லாம் பார்த்துக்கொண்டு 6 மணியளவில் ரயில் நிலையம் வந்தோம்.

அடுத்து கஜூரஹோ செல்வத‌ற்கு இரவு 8 மணிக்கு ரயில். கஜூரஹோ செல்வதற்கு மஹோபா என்ற ஊரில் இறங்கி,80 கி.மீ தூரம் பேருந்தில் செல்ல வேண்டும்.மஹோபா அதிகாலை 3 மணிக்கு சென்றோம். ரயில் நிலையத்திற்கு வெளியே ஸ்வீட்ஸ்டால்கள் மற்றும், தேனீர் கடைகள் இரவு முழுக்க திறந்திருக்கின்றன. குளிர மிக அதிகமாக இருக்கிறது. ரயிலுக்கு காத்திருப்போர் எரியும் பொருள் எதுவாயிருந்தாலும் பொறுக்கி எடுத்துவந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். நாங்களும் ஜோதியில் கலந்தோம். அந்த குளிரிலும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை கொண்டு தம் ஆட்டோக்களை நிரப்புவதில் மும்முரமாயிருந்தனர். எல்லோரும் பார்க்க அழுக்காகவே காட்சியளிக்கிறார்கள். எல்லோர் வாயிலும் வகை வகையான பாக்கு தூள். எங்கு பார்த்தாலும் துப்பியபடி உள்ளனர். நம் மீதே துப்பிவிட்டார்களோ என்று பார்த்துக்கொள்ளும் படி இருக்கும். காலை பேருந்து நிலையம் சென்று கஜூரஹோ செல்லும் பேருந்தில் 9 மணிக்கு ஏறினோம். 80 கி.மீட்டர் பயணத்தில் கண்டக்டரும், ட்ரைவரும் 5, 6 இடங்களில் இறங்கி டீ குடித்தபடி 4 1/2 மணி நேரமாக்கிவிட்டனர். வ‌ழியெல்லாம் ஆட்க‌ள் துப்பாக்கிக‌ளுட‌ன் ந‌ட‌மாடுகின்ற‌ன‌ர். வாகனங்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்கிறார்க‌ள். தோட்டாக்க‌ள் அட‌ங்கிய‌ பெல்ட்டை பூணூல் மாதிரி அணிந்திருக்கிறார்க‌ள்.

ம‌திய‌ம் 2 ம‌ணிக்கு க‌ஜூர‌ஹோ போய் சேர்ந்தோம். த‌ங்குவ‌த‌ற்கான‌ அறைக‌ள் ரூ.300 முத‌ல், 3,5,10 ஆயிர‌ங்க‌ள் வ‌ரை இருக்கிற‌து. எல்லாம் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் தான்.அனைத்து நாட்டு உண‌வ‌க‌ங்க‌ளூம் உள்ள‌ன‌. ஆனால் தென்ன‌க‌ உண‌வ‌க‌ங்க‌ள் ம‌ட்டுமில்லை. தாலி என்று ரூ.70,100 ,150,200 க்கு கிடைக்கிறது. ரொட்டி சாத‌ம் ப‌ருப்பு,பொரிய‌ல்,ஸ்வீட் அனைத்தும் அட‌ங்கிய‌ ஸ்பெஷ‌ல் பேக்கேஜ். இதை விட்டால் இருக்க‌வே இருக்கிற‌து வ‌ணிக‌ளில் பிர‌ட் ஆம்லெட்,முட்டை,பானிபூரி,வேர்க‌டலை நாங்க‌ள் த‌ங்கிய‌ அறையில் ரூ.400 க்கு 3 ப‌டுக்கைக‌ள்.. வ‌ச‌தியாக‌வே இருந்த‌து. எங்க‌ள் ப‌க்க‌த்து அறையில் இத்தாலி நாட்டினன் ஒருவன் 15 நாட்களாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவ‌னே ச‌மைத்து சாப்பிட்டுகொள்கிறானாம்.

கஜூரகோவில் தெற்கு திசை & வடக்கு திசை கோவில்கள் என்று உள்ளன. வடக்கு திசையில் ஆங்காங்கே ஒன்றொன்று என ஏழு,எட்டு வரை உள்ளன. தெற்கில் ஒரே இடத்தில் 13 கோவில்கள் உள்ளன. அங்கே மாலை நேரம் தினசரி 7 மணிக்கு ஆங்கிலத்திலும் 8 மணிக்கு கிந்தியிலும் லைட் ஷோ நடக்கிறது. அதற்கு 100 ரூ கட்டணம். கஜூரஹோவின் சரித்திரத்தை ஹிந்தி நடிகர் அமிதாப்பின் குரலில் விவரிக்கப்படுகிறது.

சிற்ப‌ கோவில்க‌ள் எல்லாவ‌ற்றையும் பார்த்துகொண்டு ம‌றுநாள் மாலை 5 ம‌ணிக்கு பேருந்து மூல‌ம் ம‌ஹோபா திரும்பினோம். பேருந்தில் வழிநெடுகிலும் ஆங்காங்கு நெருப்பு எரிக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறார்கள் . அத்தனை குளிர். அதை பார்ர்க்க முப்பது நாளும்பவுர்ணமி என்பது போல் 30 நாளும் அங்கு போகியோ என்று எண்ண தோன்றுகிறது. இரவு 8.30 மணிக்கு மகோபா பேருந்து நிலையம் வந்தோம். பேருந்து நிலயத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல 5 கி.மீ தூரமிருக்கும் . அதற்கு நபர் ஒன்றுக்கு ஷேர் ஆட்டோவில் ரூ.5 வாங்குகிறார்கள். அந்த குளிரிலும் சிறுவயது பையன் ஆட்டோ ஓட்டுகிறான். ரயில் நிலையம் அடைந்த பிறகு இரவு 12 மணிவரை நேரத்தை கொல்லவேண்டும். குளிரை சமாளிக்க வேண்டும். ரயில் நிலையம் வெளியே பெரிய பெரிய கட்டைகளை போட்டு தீமூட்டி குளிர்காய்கிறார்கள். ரயில் நிலையத்தில் இரவு முழுக்க துப்பாக்கியுடன் 3 காவலர்கள்

அன்று இர‌வு 12 ம‌ணிக்கு காசிக்கு ப‌ய‌ண‌மானோம்.ம‌றுநாள் ம‌திய‌ம் 12 ம‌ணிக்கு காசி. அங்கு திருப்ப‌தி சமீபத்திலுள்ள ஏற்பேடு ஆசிர‌ம‌ கிளை ஒன்று உள்ள‌து. இதை ந‌ண்பன் ஒருவன் மூல‌ம் ஏற்கென‌வே அறிந்திருந்த‌தால் அங்கு சென்றோம். ஒரு சாமியாரின் உத‌வியுட‌ன் எல்லா இட‌ங்க‌ளையும் சுற்றிப்பார்த்தோம். வ‌ழி நெடுகிலும் ராணுவ‌ வீர‌ர்க‌ள் துப்பாக்கியுட‌ன்,கோவிலை சுற்றி,சாலைக‌ளில் 200 மேற்ப‌ட்ட‌ ராணுவ‌ தொப்பிக‌ள். காசி ந‌க‌ர‌த்து சாலைக‌ளில் நெரிச‌ல் அதிக‌ம். இதில் ரிக்ஷாக்க‌ள் மிக அதிக‌ம். 8 கி.மீ தூர‌த்தை கடக்க 2 ம‌ணி நேரம் ஆகிய‌து.

ஆட்டோ டிரைவ‌ரை விசாரித்தால் 3 ம‌ணி நேர‌மாகுமென்றார். சாலைகளில் அந்த‌ அள‌வுக்கு நெரிச‌ல். கோவிலுக்கு செல்ல‌ சின்ன‌ சின்ன‌ ச‌ந்து போன்ற‌ தெருக்க‌ள் வ‌ழியாக‌த்தான் செல்ல‌ வேண்டியிருக்கிற‌து. தெருவெங்கும் க‌டைக‌ள். பால்,வெண்ணைய்,பன்னீர் அதிக‌மாக‌ தென்ப‌டுகிற‌து.சிறு ம‌ண்பாண்ட‌ங்க‌ளில் பாலில் த‌யாரித்த‌ வ‌கை வ‌கையான லஸ்‌ஸிக‌ள் கிடைக்கின்ற‌ன‌.

இந்க ஒருவார பயணத்தில் நாங்கள் அறையெடுத்து தங்கியது கஜூரகோவில் மட்டும் தான். மற்ற இரவுகள் எல்லாம் ரயில் நிலையத்திலேயே தங்கும்படி திட்டமிட்டுக் கொண்டோம்