Sunday, April 27, 2014

நான் கண்ட தலித் இளைஞர்கள்

இன்று நந்தினி ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். நான் அடிக்கடி ஹோட்டலுக்கு செல்லும் ஜாதியில்லை. அதிலும் நந்தினி போன்ற உயர்தர சைவ உணவகங்களுக்கு நான் சென்ற நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் அறிந்த முதல் 2 ஓட்டல்கள் தேவியும், ஆஞ்சநேய பவனும்தான். தேவி ஹோட்டல் 1970 களில் தூள் பரத்திக்கொண்டிருந்தது.

சிவாஜி தி பாஸ் மாதிரி கலெக்ஷனில் தூள்கிளப்பாவிட்டாலும் ஹைஸ்கூல் பையன்கள் இன்டர்வெல் சமயத்தில் வந்து 2 இட்லி சாப்பிட்டுவிட்டு போகும் அளவுக்கு ‘சகாயமான’ விலை. அதே நேரம் திரளான கூட்டம். ஓட்டல் முதலாளியின் 2 மனைவியரும் அமரராகிவிட்டிருக்க சாமி படங்களோடு அவர்களுக்கும் சேர்ந்து ஊதுபத்தி புகையும்.

தேவி ஓட்டல் அதன் தரத்துக்கும், குறைந்தபட்ச விலைக்கும் பிரபலமாகாது வேறு ஒரு காரணத்துக்காக பிரபலமாகியது. ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த படித்த, படிக்காத,     வேலையில்லாத, வேலையில் உள்ள இளைஞர்கள் தேவி ஓட்டலை ஒட்டியிருந்த பங்க் கடையருகில் நிற்பார்கள்.

என்.டி.ஆர் அரசியலுக்கு வந்து ஆட்சியமைத்த புதிது. அவர் சினிமாவில் இருக்கும் வரை அவர் என்ன ஜாதி என்பதே தெரியாது. அரசியலுக்கு வந்ததுமே அவர் இன்ன ஜாதி என்று தெரிந்து கொண்டு உடனே அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேர்ந்து கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.

சித்தூரில் கம்மவார் நாயுடுக்களுக்கு காங்கிரஸ் கட்சி காலத்திலேயே அரசியலில் நல்ல பிடிப்பு இருந்தது. எனவே சித்தூர் நாயுடுகள் வெகு எளிதாக தெலுங்கு தேசம் கட்சியை ஹைஜாக் செய்து விட்டனர். ஆதிதிராவிடர்கள் இந்திராகாந்தி ரிசர்வேஷன் கொடுத்த காலத்திலிருந்து காங்கிரசுக்கு ஜே போடுவது வழக்கம். இப்படியாக ஆதிதிராவிடர்கள் காங்கிரசுலயும் கம்மவார் நாயுடுக்கள் தெலுங்கு தேசத்திலும் .

ஈதிப்படியிருக்க அந்த ஆதிதிராவிட இளைஞர்கள் நாயுடுக்களை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தனர். கல்லூரி தேர்தல்களாகட்டும்...இன்னொன்றாகட்டும், சவாலாக நின்றனர். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே தெரியவில்லை.

அந்த குரூப்பில் ஒருவன். சாமுராய்த்தனமாக களத்தில் நின்ற ஆசாமி இன்று சைக்கிளில் 2 குடங்கள் கட்டிக்கொண்டு தண்ணீருக்கு போவதையும் -வேறு ஒருவன்  ஒரு புதுப்பணத்திமிரில் அரசியலில் குதித்த ஒரு திடீர் அரசியல்வாதியின் கேட்டில் சம்பளமில்லாத வேலைக்காரனாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

ஒரே பத்துச்சட்டைகள் ஆளுக்கு ஆள் மாற்றிப் போட்டுக் கொண்டு தேவி ஓட்டல் அருகில் அவர்களை  அன்று நிற்கச் செய்த அவர்களது உணர்வுகளை என்னால் இன்று மிகச்சரியாகவே உணர முடிகிறது.

அதே நேரம் அவர்களின் உணர்ச்சி வழி போராட்டம் என்பது பயனற்றுப் போனதை அவர்கள் எப்படிக் கொள்வார்களோ தெரியவில்லை. அதே குழுவில் மற்றொரு   நபர் . நன்றாகவே படித்தார். உள்ளூர் வங்கியில் பணி.

கடந்த 3 வருடங்களாக வங்கி முடக்கப்பட்டு பாதி சம்பளம்தான் கைக்கு வருகிறது. வங்கி முடக்கப்பட என்ன காரணம்... வங்கிப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்த உதவாக்கரை தனியார் வங்கிகள் திவாலானதுதான். அவற்றில் முதலீடு செய்யும் முடிவை எடுத்தது உயர்சாதியினர் கோலோச்சிய நிர்வாகக்குழு. திவாலான வங்கிகள் நிர்வகித்தவர்களும் உயர்சாதியினரே. அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் கரையேறி வந்த தலித் குடும்பம் இன்று மீண்டும் வறுமையில் தள்ளாடுகிறது.

என் கேள்வி ஒன்றுதான்:

அரசு, அதிகாரம், போலீஸ் என்று சகலத்தையும் கைவசம் வைத்திருந்த உயர் வகுப்பினரை எதிர்த்து புரட்சிக்கு முனைந்த இளைஞர்கள் அனைவருமே கடைசியாய் சொன்ன நபரை  போல் ஏன் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கக்கூடாது.

கடைசி நபர் தானாகட்டும் வங்கியில் அத்தனை பெரிய முறைகேடுகள் நடந்து வரும்போது குறைந்தபட்சம் சாதித்துவேஷத்தின் காரணமாகவோ (அ) தனது குடும்ப எதிர்காலம் கருதியோ அவற்றை ஏன் உயர் அதிகாரிகள், கோர்ட்டு, மீடியா பார்வைக்கு கொண்டு வந்திருக்க கூடாது.

தேவி ஓட்டலருகே ஃபாஷன் பரேட் நடத்திய அந்த சகோதரர்களை வழி நடத்த அந்த சாதியிலோ அல்லது உயர் வகுப்பிலோ ஒரு தலைவர் கூட இல்லாமல் போனது எப்படி? ஒரு தலித் முன்னேற ஆரம்பித்துவிட்டால் தான் ஒரு தலித் என்பதை மறக்கத்தான்/மறைக்கத்தான்  விரும்புகிறான். உயர் வகுப்பினருடன் ஐக்கியமாகத்தான் துடிக்கிறான். மற்றொரு வர்க்க சத்ரு தோன்றுவதுதான் மிச்சம்.

தலித்துகள் என்றே இல்லை. எந்த சாதியாக இருந்தாலும் மக்கள் ‘கூடாரத்துக்குள் தலை வைத்துக் கொள்ள ஒட்டகத்தை அனுமதித்த’ கதையாய் மேற்கத்திய கலாச்சாரம், கன்ஸ்யூமரிசம் போன்றவற்றை அனுமதித்து அவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறார்கள்.