Sunday, September 9, 2007

லலிதா டீச்சர் & All that


நான் பெருமைப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பு முதலே தமிழ் சங்கத்தில் பேச்சாளனாக அங்கீகாரம். ஏறக்குறைய என் அம்மாவைப் போன்ற சரீர வாகு கொண்ட லலிதா டீச்சர், 5ஆம் வகுப்பில் தமிழ் சங்க துணைத்தலைவன். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு.


பிறகு 8,9,10 வகுப்புகளில் ஆங்கிலம்,அறிவியல்,சமூகவியல் நோட்சுகளை டிக்டேட் செய்யும் சட்டாம்பிள்ளை உத்தியோகம். காலை 8.30 முதல் பள்ளி ஆரம்பமாகும் வரை என் ராஜ்ஜியம். ஆசிரியர்களைப் போலவே தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்து சாக்பீசு எடுத்துக் கொண்டுதான் வகுப்பறைக்குள் நுழைவேன்.


1982 ல் பள்ளியின் கடைசி வேலை நாளன்று மாணவிகள் க்யூவில் நின்று என்னிடம் ஆட்டோக்ராப் வாங்கியதை இன்று நினத்தால் கனவாகத்தான் தோன்றுகிறது. இன்டர் இரண்டாம் ஆண்டில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. தமிழ் மாணவர் சங்கத்தலைவன் என்ற முறையில் வாரியாரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றது. இன்டர் இரண்டாம் ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்.(பெண்ணையும்,நிலவையும் ஒப்பிட்டு ஒரு நாள் ஓய்வு,மூன்று நாள் ஓய்வு என்று எழுதிய வில்லங்க கவிதைங்க)


டிகிரி படிக்கையிலேயே நான் எழுதிய கவிதைகளுக்கு தமிழ் விரிவுரையாளர் மணி அவர்களின் பாராட்டு. டிகிரி 3 ஆம் ஆண்டில் புதுசு,நவதா என்ற பெயரில் சிற்றிதழ்கள் பிரசுரம்.